டி.டி.வி.தினகரன் செய்வதும் துரோகம் தான்: சீமான் பேச்சு

"உடலுக்கு தீங்கு எனத் தெரிந்தே மதுவை அரசு விற்பனை செய்கிறது. இவர்களுக்கு மாறி மாறி ஓட்டு போட்டதால் பிள்ளைகள் இன்று நடுரோட்டுக்கு வந்துவிட்டனர்" என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பார் சீமான் பேசினார்.

தேனியில் நாம் தமிழர் வேட்பாளர் மதன் ஜெயபாலனை ஆதரித்து சீமான் பேசியதாவது:

மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் தருவதை ஸ்டாலின் பெருமையாக பேசி வருகிறார். மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து தான் இதைத் தருகிறார்கள்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தை 9 லட்சம் கோடி கடனில் ஸ்டாலின் தள்ளிவிட்டார். அனைவரையும் கடனாளி ஆக்கிவிட்டனர். மாணவர்கள் கூட இன்று மது பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இதனை நல்லாட்சி என்கிறார் ஸ்டாலின் .

கல்வியையும் மருத்துவத்தையும் தனியார்முதலாளிகள் விற்பனை செய்கின்றனர். உடலுக்கு தீங்கு எனத் தெரிந்தே மதுவை அரசு விற்பனை செய்கிறது. இவர்களுக்கு மாறி மாறி ஓட்டு போட்டதால் பிள்ளைகள் இன்று நடுரோட்டுக்கு வந்துவிட்டனர்.

எங்கள் வேட்பாளர்கள் ஒருவர் மீது கூட எந்த வழக்கும் கிடையாது. இதே தி.மு.க.,-அ.தி.மு.க., வேட்பாளர்கள் பலர் மீது வழக்குகள் இருக்கின்றன. குக்கர் மக்கர் செய்ததால் தங்க தமிழ்செல்வன் தி.மு.க.,வுக்கு தாவிவிட்டார். டி.டி.வி தினகரன் எம்.பி., ஆகி என்ன செய்யப்போகிறார்?

பழனிசாமி செய்தது துரோகம் என்றால், டி.டி.வி.தினகரனும் தற்போது செய்துகொண்டிருப்பது துரோகம் தான். பா.ஜ., காங்கிரஸ் நாட்டுக்கே தேவை கிடையாது. இவர்கள் வந்தால் நாட்டை சர்வாதிகாரத்துக்கு தள்ளிவிடுவார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு வாக்களித்ததால் இதுவரையில் எந்த மாற்றமும் தமிழகத்தில் நடக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்