ரூ.4 கோடியும் நயினாரின் பணம் தான்: எப்.ஐ.ஆரில் தகவல்

'நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி ரூபாயும் பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் தான்' என, தாம்பரம் போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நெல்லைக்கு கடந்த 6ம் தேதி நெல்லை விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பணம் கடத்திச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, தாம்பரத்தில் வைத்து பறக்கும் படை அதிகாரிகளும் போலீசாரும் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் இருந்து ரூ.4 கோடியை போலீசார் கண்டுபிடித்தனர். இந்தப் பணத்துடன் சதீஷ், பெருமாள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட உள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும், இந்தப் பணத்தை தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்பட்டது. இது குறித்து நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், "ரயிலில் பிடிபட்ட பணத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை டார்கெட் செய்து சதிவலையில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், சதீஷ், பெருமாள் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அடுத்து, கொரியன் ரெஸ்டாரன்ட் நடத்தி வரும் பா.ஜ.,வை சேர்ந்த தொழில் பிரிவு தலைவர் கோவர்த்தனன் என்பவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், 4 கோடி ரூபாய் விவகாரத்தில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், அந்தப் பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது எனவும் நயினாரின் சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பா.ஜ., உறுப்பினர் அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பல்வேறு நபர்களிடம் சிறிது சிறிதாக பணத்தைப் பெற்று அதை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 பேர் கொண்டு சென்றுள்ளனர். அப்போது பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் பணம் சிக்கியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Kasimani Baskaran - Singapore, சிங்கப்பூர்
16-ஏப்-2024 07:20 Report Abuse
Kasimani Baskaran எவனாவது உடனே அது நைனார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்வதாக உடனே ஒத்துக்கொள்வானா? செட்டப் போல தெரிகிறது. தமிழக ஏவல்த்துறை வழக்கம் போல சொதப்பியிருக்கிறது.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்