'மண்ணின் மைந்தருக்கே வாய்ப்பு கொடுங்கள்' திருநாவுக்கரசரை தாக்கும் போஸ்டர்கள்

முன்னாள் காங்கிரஸ்எம்.பி., அடைக்கலராஜ் மகன் ஜோசப் லுாயிசுக்கு திருச்சியில் போட்டியிட வாய்ப்பு தரக்கோரி, திருச்சி முழுதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி உள்ளது. குறிப்பாக, திருச்சி எம்.பி., தொகுதியை பிடிப்பதில், தி.மு.க., கூட்டணிக்குள்ளேயே கடும் போட்டி உள்ளது.

அதேபோல், தற்போது காங்., வசம் உள்ள தொகுதியில், அறந்தாங்கியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் எம்.பி.,யாக உள்ளார்.

இருவர் போட்டி



தி.மு.க., கூட்டணியில் திருச்சி தொகுதி காங்., கட்சிக்கே ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், அவர் மீண்டும் இங்கு போட்டியிட தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதேபோல், கடந்த முறை திருச்சி தொகுதியில் போட்டியிட, தன் தந்தையுடன் பழகிய காங்., முக்கிய தலைவர்கள் மூலம் பகீரத முயற்சிகள் செய்த, காங்., மாநில செயற்குழு உறுப்பினர் ஜோசப் லுாயிஸ், இம்முறையும் திருச்சியில் போட்டியிட விரும்புகிறார்.

திருச்சியில் பிரபல தொழிலதிபரான ஜோசப் லுாயிஸ் தந்தை அடைக்கலராஜ், காங்., கட்சி சார்பில் 1984ம் ஆண்டு முதல், 1998ம் ஆண்டு வரை, தொடர்ந்து நான்கு முறை எம்.பி.,யாக இருந்தவர்.

ஆகையால், இம்முறை ஜோசப் லுாயிசுக்கு திருச்சியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். அக்கட்சியினர் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தபால் எழுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடவே, திருநாவுக்கரசருக்கு சீட் கொடுத்தால், தோல்வி உறுதி என்றும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

கட்சியில் கடும் எதிர்ப்பு



இந்நிலையில், திருச்சி மாநகர் முழுதும், மண்ணின் மைந்தருக்கே சீட் கொடுக்க வேண்டும் என்று, ஜோசப் லுாயிசுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

ஏற்கனவே, தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை; வரவில்லை என்ற குற்றச்சாட்டுள்ள திருநாவுக்கரசருக்கு எதிராக, காங்., மற்றும் தி.மு.க.,வினர் உள்ள நிலையில், தற்போது வெளியூர்க்காரர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்து, காங்., கட்சியினரே களம் இறங்கி உள்ளது, திருநாவுக்கரசருக்கு கடும் நெருக்கடியைஏற்படுத்தி உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்