தி.மு.க., - அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் அதிகரிப்பு

ஆட்சியை இழந்த அ.தி.மு.க.,வை விட, 4.4 சதவீதம் ஓட்டுகளை, தி.மு.க., கூடுதலாக பெற்றுள்ளது. லோக்சபா தேர்தலை விட, இந்த தேர்தலில், இரு கட்சிகளின் ஓட்டு சதவீதமும் அதிகரித்துள்ளது. நாம் தமிழர் கட்சி, மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

தனித்து போட்டி



தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., 37.7 சதவீதம்; அ.தி.மு.க., 33.3; காங்கிரஸ், 4.27; பா.ம.க., 3.80; பா.ஜ., 2.62; இந்திய கம்யூ., 1.09; மார்க்சிஸ்ட் கம்யூ., 0.85; நாம் தமிழர் கட்சி, 6.85; மக்கள் நீதி மய்யம், 2.45; விடுதலை சிறுத்தைகள் கட்சி, 1.06 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளன.அ.தி.மு.க., 2016 சட்டசபை தேர்தலில், 40.88 சதவீத ஓட்டுகளை பெற்றது. அடுத்து, 2019 லோக்சபா தேர்தலில், 19.19 சதவீத ஓட்டுகளை மட்டும் பெற்றது. தற்போதைய, சட்டசபை தேர்தலில், அதன் ஓட்டு சதவீதம் அதிகரித்து, 33.3 சதவீதமாகி உள்ளது.
கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 31.7 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. அடுத்து, 2019 லோக்சபா தேர்தலில், 33.5 சதவீதமாக அதிகரித்தது. இந்த தேர்தலில், 37.7 சதவீதம் ஓட்டுகளை பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது.

அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக, 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிட்ட, நாம் தமிழர் கட்சி, 6.85 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளது.
இக்கட்சி, 2016 சட்டசபை தேர்தலில், 1.06 சதவீதம்; 2019 லோக்சபா தேர்தலில், 3.85 சதவீதம் ஓட்டுகளை பெற்றிருந்தது. இந்த தேர்தலில், அதன் ஓட்டு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.
அரசியல் கட்சிகள், தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற, சட்டசபை தேர்தலில், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் அல்லது 6 சதவீதம் ஓட்டு களை பெற வேண்டும்.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சி, அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது.

அதேபோல, தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் வெற்றி பெற்ற, விடுதலை சிறுத்தைகள் கட்சியும், ஐந்து இடங்களில் வெற்றி பெற்ற பா.ம.க.,வும், அங்கீகாரம் பெற்ற கட்சிகளாக மாறியுள்ளன.அ.ம.மு.க., கூட்டணியில் இடம் பெற்று, அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்த தே.மு.தி.க., அங்கீகாரத்தை இழந்துள்ளது. அக்கட்சியின், ஓட்டு சதவீதம் மிக மோசமாக சரிந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஓட்டு சதவீதம் அதிகரித்துஉள்ளது.அதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓட்டு சதவீதமும் குறைந்துள்ளது. ஆனால், அக்கட்சி சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டு அதிகரிப்பு ஏன்?



கடந்த லோக்சபா தேர்தலை விட, இந்த சட்டசபை தேர்தலில், 23.87 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக ஓட்டளித்துஉள்ளனர். அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், லோக்சபா தேர்தலில், அதிக இடங்களை கூட்டணிக்கு கொடுத்ததால், அக்கட்சிகளுக்கான ஓட்டு சதவீதம் சரிந்தது.
சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்பதற்காகவே, சிறிய கட்சிகளையும் தங்கள் சின்னங்களில் போட்டியிட வைத்து, இரு கட்சிகளும், தலா, 170க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டன.இதன் காரணமாக, இந்த கட்சிகளுக்கு ஓட்டு சதவீதம் அதிகரித்துஉள்ளது. அதேநேரம் இளைஞர்களை அதிகம் கவர்ந்த நாம் தமிழர் கட்சியும், கூடுதல் ஓட்டு சதவீதத்தை பெற்றுள்ளது. - நமது நிருபர் -



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)