சென்னை: ஓட்டுச்சாவடிக்குள் படம் எடுப்பதற்காக கொடுக்கப்பட்ட அடையாள அட்டையை யாருமே கண்டுகொள்ளாததால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஓட்டுப்போடும் போது, 300க்கும் அதிகமானோர், ஊடகங்கள் என்ற பெயரில் உள்ளே இருந்தனர். இதனால், யானை புகுந்த வெங்கலப்பானை கடை போல, ஓட்டுச்சாவடி துவம்சமாகியது. ஓட்டுப்பதிவு அன்று, அரசியல்கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள், மக்களோடு மக்களாக, பாதுகாப்பு இல்லாத நிலையில் ஓட்டுப்போட வருவர்.
கண்டுகொள்ளவில்லை
இதனால், ஓட்டுச்சாவடிக்குள் செல்வதற்கு வாக்காளர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. அதே நேரம், தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாள அட்டை இருப்பர்கள், ஓட்டுச்சாவடிக்கு அனுமதிக்கப்படுவர். ஊடகங்களில் இருப்போருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். இது, அனைவருக்கும் கிடைத்துவிடாது. போட்டோ ஒட்டிய அடையாள அட்டையை காண்பித்தால் தான், 100 மீட்டர் துார எல்லையைத் தாண்டி ஓட்டுச்சாவடிப்பக்கமே போட்டோ, வீடியோ கேமராமேன்களை போலீசார் அனுமதிப்பர்.
அதற்கு பின், ஓட்டுச்சாவடியில் உள்ள அதிகாரிகள் அந்த அடையாள அட்டையை சரிபார்ப்பர். ஆனால், இம்முறை, பெரும்பாலும் இந்த அடையாள அட்டையை யாருமே கண்டுகொள்ள வில்லை, கேட்கவும் இல்லை. இதன் காரணமாக, ஸ்டாலின் ஓட்டுப்போட்ட, சென்னை, நந்தனம், எஸ்.ஐ.இ.டி., கல்லுாரி வளாகத்தில் இருந்த ஓட்டுச்சாவடி, கேமரா மேன்களால் நிரம்பி வழிந்தது, இதில் வாக்காளர்களும் கூட, மொபைல் போனில் படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.
செல்பி எடுக்க ஆர்வம்
ஸ்டாலின் வரிசையில் நிற்பது, கையெழுத்துப் போடுவது, மை வைப்பது ஓட்டுப் போட்டுவிட்டு ஒரு விரல் காட்டுவது என்று ஒன்றையும் விடாமல், வீடியோ மற்றும் படம் எடுத்து தள்ளினர். இதற்காக முண்டியடித்ததை பார்த்தால், முதல் வேலையாக, கொரோனா பயந்து ஓடியிருக்கும். போட்டோ எடுப்பதற்காக கிடைத்த டேபிள் சேர் மீது ஏறியதில், அங்கு இருந்த அதிகாரிகள் மிரண்டுபோயினர். அவர்கள் வைத்திருந்த சரிபார்ப்பு பட்டியல் எல்லாம் கிழிந்தது பறந்தது.
வரிசையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வாக்காளர்கள் பலரும், தங்களது மொபைல் போனை துாக்கிக் கொண்டு, ஓட்டுச் சாவடிக்குள் நுழைந்து, ஸ்டாலினுடன், 'செல்பி' எடுப்பதில் ஆர்வம் காட்டினர். ஸ்டாலின் ஓட்டுப்போட்டுவிட்டு போன பிறகு, அந்த ஓட்டுச்சாவடிக்குள் கேட்பாரற்று சிதறிக்கிடந்தவை, பத்திரிகையாளர்களுக்கான அடையாள அட்டைகளும் தான்.