3 நாட்களாக ஸ்டாலின் மவுனம் ஏன்: அன்புமணி கேள்வி

"காங்கிரசின் நலன்களுக்காகவும் கர்நாடகத்தின் நலன்களுக்காகவும் காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை ஸ்டாலின் தாரைவார்க்கத் துணிந்துவிட்டார்" என, பா.ம.க., தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

அன்புமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையாவின் பேச்சுக்கு 3 நாட்களாக முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்?

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருக்கிறார்.

பெங்களூர் தெற்குப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், 'மேகேதாட்டுவில் அணை கட்ட மத்திய பா.ஜ., அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும்' என்று கூறியிருக்கிறார். சித்தராமையாவின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் படியும் காவிரி ஆற்றின் குறுக்கே தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை பார்லிமென்ட்டில் பலமுறை நான் பெற்றுள்ளேன்.

உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்த பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

காங்கிரஸ் ஆட்சியில் மேகேதாட்டுவில் அணையை கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் ஸ்டாலின் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை.

தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தின் நலன்களைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஸ்டாலினுக்கு உண்டு.

ஆனால் அவர் அமைதியாக இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும் கர்நாடகத்தின் நலன்களுக்காகவும் காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்க்கத் துணிந்துவிட்டார் என்பது தான்.

1970ல் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார்.

2008ல் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை கருணாநிதி நிறுத்தி வைத்தார்.

அவர் வழியில் வந்த ஸ்டாலின், இப்போது மேகேதாட்டுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்த துரோகத்திற்கு தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்