சென்னை :அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., - இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
'ஆட்சித் தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாக செயல்பட வேண்டிய, கடமை நமக்கு இருக்கிறது' என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.அவர்கள் அறிக்கை:தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, ஓட்டளித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி.
கொள்கை வழி
தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடந்த, அ.தி.மு.க., அரசு, தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஆற்றி இருக்கும் அரும் பணிகளை, மக்கள் அனைவரும் நன்கு அறிவர். நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒருபக்கம் ஆளும் கட்சி; மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித் தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாகவும் செயல்பட வேண்டிய, கடமை நமக்கு இருக்கிறது.
தமிழக சட்டசபையிலும், ஆட்சி நிர்வாகத்திலும், எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன், என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ, அவை அனைத்தையும், மனத்துாய்மையுடன்,
கட்சியின் கொள்கை வழி நின்று செவ்வனே நிறைவேற்றுவோம். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட, வேட்பாளர்களின் வெற்றிக்காக, இரவு, பகல் பாராது அரும்பணியாற்றிய, கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேர்தல் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
தோளோடு தோள்
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெ.,வால் வழிநடத்தப்பட்டு, ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி இருக்கும் அ.தி.மு.க., தொடர்ந்து மக்கள் பணிகளை ஆற்றவும், கட்சியை கட்டிக் காக்கும் கடமையில், தோளோடு தோள் நின்று உழைக்கவும், கட்சியினர் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். கட்சியை காப்போம்; கடமைகளைத் தொடர்வோம்.இவ்வாறு ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., தெரிவித்துஉள்ளனர்.
ஸ்டாலினுக்கு இ.பி.எஸ்., வாழ்த்து
முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு, இ.பி.எஸ்.,வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்டாலின், 'மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க, தங்கள் ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவை' என, கேட்டுள்ளார்.அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு, என்னுடைய நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என, கூறியுள்ளார்.
அதேபோல, கேரளா முதல்வராக பொறுப்பேற்க உள்ள பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்க உள்ள மம்தா பானர்ஜி ஆகியோருக்கும், இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்துள்ளார்.வாழ்த்து தெரிவித்த, இ.பி.எஸ்.,சுக்கு, ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவு:தங்களுக்கு என்னுடைய நன்றி. மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க, தங்களது ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவை. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்.இவ்வாறு, ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அதேபோல, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.,சும், முதல்வராக பொறுப்பேற்க உள்ள, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
வாசகர் கருத்து