தேர்தல் அதிகாரிகளால் மனஉளைச்சல்: சத்யபிரதா சாஹுவிடம் வணிகர்கள் புகார்

"தேர்தல் அதிகாரிகள் தவறான கண்ணோட்டத்தில் கையாள்வதால் வியாபாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்" என, வணிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, இன்று சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஆனால், தேர்தல் அதிகாரிகள் தவறான கண்ணோட்டத்தில் கையாள்வதால் அடித்தட்டு, நடுத்தர வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, பண இழப்பு, மனஉளைச்சல், வாழ்தார இழப்பு போன்றவற்றுக்கு வணிகர்கள் ஆளாகியுள்ளனர்.
நாட்டில் நிலவும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை அடிப்படையில், ரொக்க கொள்முதலுக்கு குறைந்தது 2 லட்ச ரூபாய் வரையில் வணிகர்கள் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும்.
காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் கூட 2 லட்ச ரூபாய் வரையில் எடுத்துச் செல்ல வேண்டி உள்ளது. வணிகர்கள், உரிய விற்பனை பட்டியலுடன் பொருள்களை கொண்டு செல்லும்போது வாகனங்களை தடுத்து கைப்பற்றுவதையும் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தி காலதாமதம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, பொருள்கள் விநியோகத்திலும் மக்கள் சேவையிலும் வணிகர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும்.
மே 5ம் தேதி மதுரையில் வணிகர் தின மாநாடு நடத்தப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளில் எந்தவித குறுக்கீடும் இல்லாமல் ஒத்துழைப்பு அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து