கடைசி நேரத்தில் மேலிடம் நெருக்கடி ; மன உளைச்சலில் தி.மு.க., வேட்பாளர்கள்

கொரோனா அச்சுறுத்தல், வருமான வரித் துறை சோதனை என, தி.மு.க.,வை அச்சுறுத்தி முடக்க, களத்தில் ஏராளமான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும், எதற்கும் அஞ்சாமல் சென்று கொண்டிருக்கின்றனர், தி.மு.க., தலைவர்கள்.

கடைசியாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர் மகளிர் அணி செயலர் கனிமொழி. கட்சியின் தென் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதும், அவர், மதுரையில் துவங்கி கன்னியாகுமரி வரை பிரசாரம் செய்தார். இப்போது தொற்று உறுதியாகி மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகி இருக்கிறார். இதே அச்சுறுத்தல், அவரை விட மூத்தவரான ஸ்டாலினுக்கும் இருக்கிறது. அவரும் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். மகன் உதயநிதியும்மாநிலம் பூராவும் சுற்றி வருகிறார்.

இதற்கெல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு பலன் இல்லை என, கடைசியாக எடுக்கப்பட்ட, 'சர்வே' முடிவுகள், தி.மு.க.,வுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்திருக்கின்றன. அ.தி.மு.க., தரப்பு கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி, பெரும்பாலான ஊர்களில் பட்டுவாடாவை முடித்து விட்டதால்,அக்கட்சியினரும், மேலிடத்தில் இருப்பவர்களும் தெம்பாக இருப்பதாகவும், தி.மு.க., தலைமைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தி.மு.க., தரப்பிலும் வாக்காளர்களை கவனித்தால் மட்டுமே, இழுபறியாக இருக்கும் பல தொகுதிகளில் ஒன்றிரண்டாவது பிடிக்க முடியும் என, கள தகவல்கள் சொல்வதால், மேலிடத்தில் இருந்து வேட்பாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால் நொந்து போயிருப்பவர்கள் வசதி குறைவான வேட்பாளர்கள். திருத்தணி சந்திரன் நகர செயலராகவும், நகர்மன்ற தலைவராகவும் இருந்து நிறைய சம்பாதித்தவர் தான். ஆனால், கட்சிக்காக நிறைய செலவழித்து விட்டதால், தற்போது கையில் பணமில்லை. அதை சொன்னால் தலைமை ஏற்க மறுக்கிறது. '5 கோடி ரூபாய் செலவழிப்பேன் என்று சொல்லிதானே, 'சீட்' வாங்கினீர்கள்' என, கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார்.

திருநெல்வேலி ஏ.எல்.எஸ்.லட்சுமணன். இவர் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர். அப்பாவும் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். ஆனால், கை சுத்தம்; அதனால் வாய் நீளம். நேர்காணலிலேயே, 'என்னிடம் சல்லி பைசா கிடையாது. கட்சி காசு கொடுத்தால் செலவு செய்கிறேன்; நாந்தான் திரட்ட வேண்டும் என்றால் எனக்கு சீட்டே வேண்டாம். யாரை நீங்கள் வேட்பாளராக நிறுத்தினாலும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன்' என்றவர்.

அதன் பிறகும் அவரையே வேட்பாளராக அறிவித்து விட்டு, இன்று வரை செலவுக்கு பணம் கொடுக்கவில்லை மேலிடம். 'கடன் வாங்கி செலவு செய்யுங்கள்; தேர்தலுக்கு பின் பார்த்துக் கொள்ளலாம்' என, அறிவாலயத்தில் இருந்து போன் போட்டு சொன்னால், 'தோற்று விட்டால், கடனை எப்படி அடைப்பேன்?' என, கேட்கிறார் லட்சுமணன். அதே நிலை தான், பாளையங்கோட்டை தொகுதியில் அப்துல் வஹாபுக்கும். நிறைய செலவழிக்க முடியும் என்று நேர்காணலில் சொல்லிவிட்டார்.

ஆனால், அதற்கு முன்பே கட்சிக்காக நிறைய கடன் வாங்கி செலவழித்து விட்டதால், வேட்பாளர் ஆன பின், அவர் கேட்ட இடங்களில் கடன் கிடைக்கவில்லை. மேலிட நெருக்கடி அதிகமாவதால், எதிரில் வரும் எல்லாரிடமும் கடனுக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்கிறார். இந்த மூவரைப் போலவே, மதுரவாயலில் காரம்பாக்கம் கணபதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், சங்கராபுரம் உதயசூரியன், நன்னிலம் ஜோதிராமன், கடலுார் அய்யப்பன், திரு.வி.க., நகர் தாயகம் கவி, கே.வி.குப்பம் சீதாராமன், குடியாத்தம் அமலு, ஆத்துார் சின்னதுரை, தாராபுரம் கயல்விழி, வேதாரண்யம் வேதரத்தினம், திருவிடைமருதுார் கோவி செழியன், சங்கரன்கோவில் ராஜா என, பணப் பிரச்னையில் சிக்கி தடுமாறும், தி.மு.க., வேட்பாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, தி.மு.க., நிச்சயமாக ஆட்சிக்கு வரும் என பரவலாக பேசப்பட்டதால், அக்கூட்டணியின் வேட்பாளர்கள் உற்சாகமாக இருந்தனர். இப்போது நிலவரம் கலவரமாகி விட்டது என தெரிந்ததும், கடன் தருவதாக உறுதி அளித்தவர்கள்கூட போன் போட்டால் எடுப்பது இல்லை. இதனால், தி.மு.க., வேட்பாளர்கள் பலர், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக தகவல். இன்னும், இரண்டு நாட்களை செலவு செய்யாமல் கடக்கும்வேட்பாளர்கள், வெற்றியோ - தோல்வியோ கடன் வலையில் சிக்காமல் தப்பித்து விடலாம்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)