லோக்சபா தேர்தல் சுதந்திரமாக நடக்குமா : செல்வப்பெருந்தகை கேள்வி

'லோக்சபா தேர்தல் சுதந்திரமாக, சுயேட்சையாக நடப்பதற்கு வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளது' என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட வேண்டிய நேரத்தில் தேர்தல் கமிஷன், அதன் அதிகாரிகளை தேடிக் கொண்டிருப்பது கேலிக்குரியதாக உள்ளது.

லோக்சபா தேர்தல் ஒருசில நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிற நிலையில், எதிர்பாராத விதமாக தேர்தல் கமிஷனர் அருண் கோயல் பதவி விலகியிருப்பது நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு தலைமை தேர்தல் கமிஷனர், இரண்டு தேர்தல் கமிஷனர் பதவிகள் உள்ளன.

தற்போது தலைமை தேர்தல் கமிஷனராக ராஜிவ்குமார் செயல்பட்டு வருகிறார். இரண்டு தேர்தல் கமிஷனர்களில் ஒரு பணியிடம் காலியாக உள்ளது. மற்றொரு ஆணையரான அருண் கோயல் கடுமையான கருத்து வேறுபாடு காரணமாக பதவி விலகுவதற்கான காரணங்களை கூறாமலேயே வெளியேறிவிட்டார்.இதன்மூலம், தேர்தல் ஆணையம் எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அருண் கோயலின் பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ளது. இந்நிலையில், அவர் பதவி விலகியிருப்பது கடும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. லோக்சபா தேர்தல் சுதந்திரமாக, சுயேட்சையாக நடப்பதற்கு வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளன. சமீபத்தில் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்று அறிவித்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்திருக்க வேண்டும்.

அதனைத் தேர்தல் ஆணையம் மார்ச் 13 ஆம் தேதி தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதனை முடக்குகிற வகையில் பிரதமர் மோடி அரசு தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக கையாள முயற்சி செய்கிறது.

இன்றைய தேர்தல் நடைமுறை என்பது சமநிலைத்தன்மை இல்லாததாக இருக்கிறது. இதன் பின்னணியில் இந்தியத் தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக இருப்பதால் தான் பிரதமர் மோடி வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 370 இடங்களையும், கூட்டணியோடு 400 இடங்களையும் கைப்பற்றுவோம் என்று உறுதியாக சொல்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்