'சீன கொடியுடன் விளம்பரம்; தி.மு.க., மாறவில்லை!' :அண்ணாமலை விமர்சனம்

பிரதமரின் தூத்துக்குடி நிகழ்வை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களையும் துவக்கி வைத்தார். இதில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடி எம்.பி., கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். ஆனால், தூத்துக்குடியை சேர்ந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்ளவில்லை.

நாளிதழ்களில் நிகழ்வு குறித்து விளம்பரம் கொடுத்திருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிரதமர் விழாவை புறக்கணித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ' இன்று நாளிதழ்களில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடுத்துள்ள விளம்பரம், சீனா மீதான தி.மு.க.,வின் அர்ப்பணிப்பையும் நாட்டின் இறையாண்மையை முற்றிலும் புறக்கணிப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஊழலில் கொடிகட்டிப் பறக்கும் கட்சியான தி.மு.க., குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ஸ்டிக்கர் ஒட்டுவதில் தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது. இது அவர்களின் கடந்த கால தவறுகளை புதைக்கும் முயற்சியை மட்டும் நிரூபிக்கிறது.

ஆந்திராவில் சதீஷ் தவான் விண்வெளி மையம் உள்ளது. இது ஏன் தமிழகத்தில் இல்லை என்பதை தி.மு.க.,வுக்கு நினைவூட்ட வேண்டும். இஸ்ரோவின் முதல் தேர்வாக தமிழகம் இருந்தது. அன்றைய முதல்வர் அண்ணாதுரை, கடுமையான தோள்பட்டை வலி காரணமாக பங்கேற்க முடியவில்லை. அவருக்குப் பதிலாக தனது அமைச்சர்களில் ஒருவரான மதியழகனை அனுப்பி வைத்தார்.

அவர் மோசமாக நடந்து கொண்டார். இதுதான் நமது விண்வெளி திட்டத்துக்கு 60 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த வரவேற்பு. தி.மு.க., மாறவில்லை. இன்னும் மோசமாகிவிட்டது' எனப் பதிவிட்டுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்