தி.மு.க.,வும் பழனிசாமியும் செய்த சூழ்ச்சி: ஓ.பி.எஸ்., கொதிப்பு

"தி.மு.க.,வும் பழனிசாமி அணியும் மக்களைக் குழப்ப வேண்டும் என நினைக்கின்றன. ஆனால், மக்களை யாரும் குழப்ப முடியாது. அவர்கள் தெளிவாக உள்ளனர்" என, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ராமநாதபுரம், முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடந்த பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

நான் சுயேச்சையாக போட்டியிடும் போது 3 சின்னங்களைக் கேட்டேன். ஆனால், நான் நினைத்த சின்னம் கிடைக்கவில்லை. என்னையும் சேர்த்து இந்த தொகுதியில் 6 பன்னீர்செல்வங்கள் எனக்கு எதிராக போட்டியிடுகின்றனர்.

இப்படியொரு சூழ்ச்சியை தி.மு.க.,வும் பழனிசாமி அணியும் சேர்ந்து செய்துள்ளன. மக்களைக் குழப்ப வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், மக்களை யாரும் குழப்ப முடியாது. அவர்கள் தெளிவாக உள்ளனர்.

ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்களுக்கு மேல் கேட்டால் குலுக்கல் சீட்டு போட்டு சின்னத்தைக் கொடுப்பார்கள். அப்படித் தான் இறைவன் தந்த வரத்தால் பலாப்பழம் சின்னம் கிடைத்தது.

அ.தி.மு.க., தொண்டர்களின் உரிமையை மீட்கும் வகையில் ஓர் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். 10 ஆண்டுகாலம் சிறப்பான ஓர் ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார். உலகில் உள்ள அனைத்து வல்லரசு நாடுகளும் வளர்ச்சியடைந்த நாடுகளும் ஒன்று கூடி ஒரு மாநாட்டை நடத்தினார்கள்.

அந்த மாநாட்டில், 'உலகின் தலைசிறந்த நிர்வாகி மோடி தான்' என தெரிவித்தனர். அந்தளவுக்கு நாட்டுக்கு பெருமையை பெற்றுத் தந்துள்ளார், பிரதமர் மோடி.

ராமநாதபுரம் தொகுதி முழுக்க குடிநீர் பிரச்னை தீர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. வெள்ள காலங்களில் கடலில் கலக்கும் நீரை வைகை ஆற்றின் பல இடங்களில் நீர்த்தேக்கங்களை கட்டினால் குடிநீர் பிரச்னையை தீர்க்கப்படும். தொகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்