Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 விஜய் பொதுவெளிக்கு வர வேண்டும் அப்போதுதான் அரசியல் தெரியும்: பழனிசாமி

 விஜய் பொதுவெளிக்கு வர வேண்டும் அப்போதுதான் அரசியல் தெரியும்: பழனிசாமி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: “முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், தமிழகம் தலைகுனிந்து தொங்கிப்போச்சு,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், அவர் அளித்த பேட்டி: இரண்டு மாதங்களுக்கு முன் பழனிசாமி கடைவிரித்தும், அங்கு யாருமே கூட்டணிக்கு போகவில்லை என ஸ்டாலின் விமர்சித்தார். ஆனால், அ.தி.மு.க., தலைமையில் தே.ஜ., கூட்டணி பலம் வாய்ந்ததாக அமைந்து விட்டதால், தினமும் ஏதேனும் அவதுாறு கிளப்புகிறார். 'தமிழகம் தலைகுனியாது' என, பிரசாரம் செய்கிறார்.

ஒன்றுமே தெரியவில்லை

ஆனால், அவரது ஆட்சியில், தமிழகம் தலைகுனிந்து தொங்கிப்போச்சு. கொரோனோ காலத்தில், ஒரு ரூபாய் கூட வருவாய் இல்லாமல் ஆட்சியை நடத்தினேன். இப்போது, நடைமுறையில் சாத்தியம் இருக்கும் திட்டங்களை வாக்குறுதியாக கொடுக்கிறேன்; நிச்சயம் நிறைவேற்றுவேன்.

த.வெ.க., தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்கு பின், 72 நாட்கள் வெளியே வரவில்லை. மக்களை சந்திக்கக்கூட அவருக்கு நேரமில்லை. தே.ஜ., கூட்டணிக்கு அ.தி.மு.க., தான் தலைமை என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்தி விட்டார்.

அதன் பின்பும், தே.ஜ., கூட்டணிக்கு யார் தலைமை என்பது குறித்து விஜய் பேசிக் கொண்டிருக்கிறார். நாட்டில் என்ன நடக்கிறது; யார், யாருடன் கூட்டணி வைத்திருக்கின்றனர்; அதற்கு யார் தலைமை என, விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை.

பொதுவெளிக்கு வந்தால்தான் அவருக்கு அரசியல் தெரியும். ஒரு கட்சியின் தலைவராக இருந்தும், இன்னும் அறியாமையில் இருக்கிறார். ஒரு முறையாவது செய்தியாளர்களை சந்தித்து, அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தால் தான் நாட்டு நடப்புகள் தெரியும்.

ஊழல் சக்தி

அ.தி.மு.க., தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை 'ரோல் மாடல்' எனக் கூறிக்கொள்ளும் விஜய், அவர்கள் வழிவந்து, அவர்கள் வழியில் ஆட்சி நடத்திய எங்களை ஊழல் சக்தி என்கிறார். என் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினர். நீதிமன்றத்தில், நிரபராதி என தீர்ப்பு வாங்கினேன். ஆனால், அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேறி விஜயுடன் இருப்பவர்தான், ஊழல் வழக்கில் சிறை சென்று வந்தவர்.

ஜெயலலிதாவுக்கு உண்மையாக இருந்தவர்கள், அவருடைய மேலான ஆசியுடன் கட்சியில் இருக்கிறோம். அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்தவர்கள், ஜெயலலிதாவின் ஆன்மாவால் ஆட்டிப்படைத்து, துரத்தப்பட்டு இருக்கின்றனர். சசிகலா விஷயம் முடிந்துவிட்டது. இனி, அதுகுறித்து பேசி பிரயோஜனமில்லை; அதனால், அது பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.

கல்விக்கடன் முழுதும் தள்ளுபடி!


சட்டசபை தேர்தலையொட்டி அ.தி.மு.க.,வின் முதல்கட்ட வாக்குறுதிகளாக ஐந்து அறிவிப்புகளை, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி கடந்த மாதம் வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக, நேற்று புதிதாக ஐந்து வாக்குறுதிகளை பழனிசாமி வெளியிட்டார்.
அதன் விபரம்:
முதியோர், கைம்பெண்கள், முதிர்கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் போன்றோருக்கு வழங்கப்படும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம், 1,200 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்
கல்விக்காக மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்; கல்விக்கடன் முழுவதையும் அரசே திருப்பி செலுத்தும்
அரிசி குடும்ப அட்டைதாரார்களுக்கு, ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்
ஜல்லிக்கட்டில் உயிரிழந்தால், 10 லட்சம் ரூபாய்; படுகாயமடைந்தோருக்கு, 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்கப்படுத்த, 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்குவதோடு, 'ஆன்லைன்' பதிவு முறை ரத்து செய்யப்படும்
சிறுபான்மையின பெண்கள் சுயதொழில் துவங்க, வட்டியில்லா கடன் வழங்குவதோடு, மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

Advertisement

பிப் 05, 2026 01:13 pm

ஒளிந்து கொண்டுள்ள புஸ்ஸியிலிருந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் தவெக ஜோசப் விஜய் வெளியில் வருவது உமக்கு தெரியாதா?

Reply Rate this