எட்டு பேருக்கு தொகுதி வேண்டும்: புதிய நெருக்கடியில் பிரேமலதா
சென்னை: தே.மு.தி.க.,வில் எட்டு பேருக்கு தொகுதிகளை உறுதிசெய்ய வேண்டிய நெருக்கடிக்கு, அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா தள்ளப்பட்டுள்ளார்.
கூட்டணி அமைப்பதில் எந்த முடிவையும், தே.மு.தி.க., தலைமை இன்னும் அறிவிக்கவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் எட்டு தொகுதிகள் வரை கொடுக்க, அக்கட்சி முன்வந்தது. ஆனால், ராஜ்யசபா 'சீட்' மற்றும் தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை பிரேமலதா எதிர்பார்த்தார். இதனால், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைவது இழுபறியாகி உள்ளது.
இதேபோல, தி.மு.க., கூட்டணியிலும் தே.மு.தி.க.,வை இழுக்க பேச்சு நடந்து வருகிறது. அக்கட்சி தரப்பில் ஆறு தொகுதிகள் வரை தருவதாக உறுதியளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஒரு ராஜ்யசபா சீட்டும் 10 தொகுதிகளும் வேண்டும் என, பிரேமலதா வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால், கூட்டணி குறித்த முடிவை அறிவிக்காமல், மதில்மேல் பூனையாக தே.மு.தி.க., உள்ளது.
இதனிடையே, கட்சியில் எட்டு பேருக்கு தொகுதிகளை உறுதிசெய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு, பிரேமலதா தள்ளப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: கடந்த 2011 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., 29 இடங்களில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது. அப்போது, எம்.எல்.ஏ.,வாக இருந்த பலரும் தே.மு.தி.க.,வில் இருந்து விலகி மாற்று கட்சிகளுக்கு சென்று விட்டனர்.
சேலம் மோகன்ராஜ், விருகம்பாக்கம் பார்த்தசாரதி, விழுப்புரம் வெங்கடேசன், எழும்பூர் நல்லதம்பி, கெங்கவல்லி சுபா ஆகியோர் கட்சியில் எஞ்சியுள்ளனர். இவர்களுக்கு மீண்டும் 'சீட்' உறுதிசெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இதேபோல, கட்சிக்கு அதிகளவில் நிதியுதவி செய்யும், மாநில அவைத்தலைவர் தர்மபுரி இளங்கோவன், திருவள்ளூர் மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கும் சீட் உறுதி செய்ய வேண்டும்.
விஜயகாந்த் வெற்றி பெற்ற ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட, பிரேமலதா விரும்புகிறார். அதன்படி, எட்டு பேருக்கு தொகுதிகளை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பிரேமலதா உள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Advertisement
பிரேமலதாவின் செயல்கள் மிகுந்த எரிச்சலை தருகிறது...இருந்தாலும் கூட அனைத்து கட்சிகளுமே ஒரு விதத்தில் பேரத்தின் அடிப்படையில்தான் கூட்டணியில் இருக்கிறார்கள். கொள்கையெல்லாம் எதுமே கிடையாது.அதனால் பிரேமலதாவை மட்டுமே குறிவைப்பதும் தவறாகவே நினைக்கிறேன்.ஏதோ ஒரு மிகப்பெரிய சிக்கலில் இருப்பார் போல் தெரிகிறது.
பிரேமலதா ஏற்கனவே எடப்பாடியார் சொல்லியபடி அவரை நம்பி பிரதமர் மோடி வந்த அன்றே கூட்டணியில் இனைந்து இருக்கனும். நிச்சயம் அஇஅதிமுக நியாயமான முறையில் தொகுதிகள் ஒதுக்கி இருக்கும்.ஏற்கனவே வாக்குறுதி கொடுத்த ராஜ்யசபா தொகுதியும் கொடுத்து இருக்கும். தவறு செய்தவர் பிரேமலதா... இனியும் காலம் கடத்தாமல் அஇஅதிமுகவிடம் இனைந்தால் கட்சியையும் காப்பாற்றலாம்.இழந்த மரியாதையையும் மீட்கலாம்.முடிவு பிரேமலதா கையில்.
நான் ஏற்கனவே பதிவிட்டது போல் இந்த பிரேமலதா விஷயத்தில் மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கும்வரை திமுகவும், அதிமுகவும் மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு தேமுதிகவிடம் சீட்டு பேரத்தில் ஈடுபட்டு கடைசி நேரத்தில் இந்த இரண்டு கட்சிகளும் பிரேமலதாவிற்கு இடமில்லை என விரட்டிவிட வேண்டும். அப்போது தான் இந்த பிரேமலதா அரசியல் அநாதையாகி வீட்டோடு அடங்கிக் கிடப்பார்.
விஜயகாந்த் தலைவர் இருக்கும்போதே, பிரேமலதா செய்த பேராசையால் அவரின் கட்சி வெல்லமுடியல, இப்போ இவங்களுக்கு தொகுதிகொடுத்தால் அம்போதான் அந்த கட்சி.
யாரும் கூட்டணி வைத்து கொள்ள வேண்டாம். கொஞ்ச நாளில் கட்சி காணாமல் போய் விடும். கட்சிகள் இவ்விதம் குறைந்தால் நல்லதுதான்


விஜய்காந்துக்கு தான் மதிப்பே தவிர இந்த அம்மா மீது யாருக்கும் மரியாதை இல்லை. இந்த அம்மாவை விmக்கி வைப்பதே கட்சிகளுக்கு நல்லது