'துக்கடா' கட்சிகளை தூக்கி எறிந்த தமிழகம்

'தேர்தல் வரும் பின்னே; கட்சிகள் துவக்கப்படும் முன்னே' என, புதுமொழி சொல்லும் அளவுக்கு, தமிழகத்தில் தேர்தல் வந்து விட்டால், 'லெட்டர் பேடு' கட்சிகள் புற்றீசலாகக் கிளம்பி விடும்.
ஏதோ ஒரு சமுதாயத்தைப் பாதுகாக்க, யாரோ ஒரு தலைவர் புதிய அவதாரம் எடுத்து, அனைவருக்கும் அழைப்பு விடுப்பார்.


மாநாடு நடக்கும்; நம் சமுதாயத்துக்கென்று ஒரு கட்சி என்பார். கடைசியில் அது ஏதோ ஒரு பெரிய கட்சிக்கு ஆதரவளிக்கும். தலைவர், 'பெட்டி'யோடு வீட்டுக்குக் கிளம்பி விடுவார்.இதையெல்லாம் பார்த்துப் பார்த்து நொந்து போன தமிழக மக்கள், இப்போது எந்த ஜாதிக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்ற மனநிலைக்கு வந்து விட்டனர். இந்தத் தேர்தலில், ஜாதிக் கட்சிகளை மட்டுமின்றி, சின்னச் சின்ன கட்சிகளையும், தமிழக மக்கள் மொத்தமாக புறக்கணித்துள்ளனர். தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டு பெரிய கட்சிகள் அமைத்திருந்த கூட்டணிகளில் தான், தமிழகத்தின் பெரும்பான்மையான கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதனால், அந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு விழுந்த ஓட்டுகளை வைத்து, அவற்றின் சதவீதத்தைக் கணக்கிடுவது கடினம்.

தனித்து நின்ற கட்சிகளில், பெரியளவில் ஓட்டுகள் வாங்கிய கட்சி என்று பார்த்தால், 'நாம் தமிழர்' கட்சிதான். 6.85 சதவீதம் ஓட்டுகள் வாங்கி, தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இதற்கு அந்தக் கட்சி, 234 தொகுதிகளிலும் தனியாக வேட்பாளர்களை நிறுத்தியது, மிக முக்கியக் காரணம்.

இவற்றைத் தவிர்த்து, சின்ன சின்ன கட்சிகளைச் சேர்த்து நின்ற அ.ம.மு.க., மொத்தம், 2.47 சதவீத ஓட்டுகளை மட்டுமே வாங்கியுள்ளது. சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து, முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்தித்த, கமலின் மக்கள் நீதி மய்யம், 2.45 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது. இவற்றைத் தவிர்த்து, பிற கட்சிகள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி ஓட்டுகள் வாங்கவில்லை.
இதில் இருந்தே, இனி தமிழகத்தில் எந்தக் கட்சியாலும், கூட்டணியின்றி தனித்து நின்று வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. - நமது நிருபர் -



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)