லோக்சபா தேர்தல்: பா.ஜ., - பா.ம.க., கூட்டணி உறுதி

லோக்சபா தேர்தலில் பா.ஜ., -பா.ம.க கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதாக, பா.ம.க., மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, கூட்டணிகளையும் தொகுதிப் பங்கீடுகளையும் நிறைவு செய்யும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்ட நிலையில், பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு குறித்து முழு விவரம் வெளியாகவில்லை.

கடந்த சில நாள்களாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் அ.தி.மு.க.,வின் இரண்டாம்கட்ட தலைவர்கள் பேச்சு நடத்தி வந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இறுதி செய்யப்படலாம் என தகவல் பரவியது.

அதற்கேற்ப, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் இல்லத்தில் பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்துப் பேசினர். ஆனால், நாங்கள் பழனிசாமியை சந்திக்க செல்லவில்லை என, அந்த எம்.எல்.ஏ.,க்கள் மறுப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, பா.ம.க., எம்.எல்.ஏ., சேலம் அருள், பழனிசாமியை சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், கூட்டணி தொடர்பாக முடிவெடுப்பதற்காக பா.ம.க.,வின் உயர்மட்டக் குழு இன்று கூடியது. லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பா.ம.க., நிர்வாகிகளுடன் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

கூட்டம் முடிந்த பின், செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க., மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன், "பா.ஜ.,வுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டணி ஒப்பந்தம் கையொப்பமான பின்பு தொகுதிகள் நிலவரம் குறித்து அறிவிக்கப்படும். வேட்பாளர்கள் யார் என்பது குறித்து ஓரிரு நாள்களில் ராமதாஸ் அறிவிப்பார்" என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்