முழு தரவுகளும் வெளியாக 3 நாள் கெடு: எஸ்.பி.ஐ.,க்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

"தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தரவுகளையும் மார்ச் 21க்குள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும்" என, எஸ்.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'தேர்தல் பத்திரங்கள் என்ற நடைமுறை, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' என, கடந்த பிப்., 15ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த விவகாரத்தில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.

மேலும், மார்ச் 15ம் தேதிக்குள் தேர்தல் பத்திர தரவுகளை தேர்தல் கமிஷனின் இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஒருநாள் முன்னதாக அதாவது, மார்ச் 14ம் தேதியே தேர்தல் கமிஷன் இணையத்தில் பதிவேற்றம் செய்தது.

ஆனால், எஸ்.பி.ஐ., அளித்த தேர்தல் பத்திர விவரத்தில் பிரத்யேக எண்கள் இல்லாமல் இருந்தன. இது குறித்த கேள்வியை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியிருந்தனர். இதற்கிடையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் குறித்த கூடுதல் தரவுகளை தேர்தல் கமிஷன் இணையத்தில் வெளியிட்டது.

இந்த தகவல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பர்டிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது, "தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பாக பாரத் ஸ்டேட் வங்கி வெளியிட்ட தரவுகளில் திருப்தியில்லை" என நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு எஸ்.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தீர்ப்பை நாங்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையில் தகவல்கள் அளிக்கப்பட்டன" என்றார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்றால் அதன் அர்த்தம், தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், தேதி, எவ்வளவு தொகை மற்றும் தேர்தல் பத்திரத்தின் சீரியல் எண் என அனைத்தும் சேர்ந்தது தான். இதை நாங்கள் தெளிவாக குறிப்பிட்டும் விவரங்களை ஏன் வெளியிடவில்லை?" என கேள்வி எழுப்பினர்.

பின், "தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அனைத்து தரவுகளையும் வெளியிட வேண்டும். எஸ்.பி.ஐ., நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும். மார்ச் 21ம் தேதிக்குள் முழு விவரங்களையும் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும். அன்று மாலையே அந்த தரவுகள், இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்" என. உத்தரவிட்டனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்