பொன்முடியை நிராகரித்த கவர்னர்: சுப்ரீம் கோர்ட் சென்ற ஸ்டாலின்

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.,வும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது விசாலாட்சி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்து, 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அடுத்த நிமிடமே எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் பதவியை பொன்முடி இழந்தார். திருக்கோவிலூர் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக, எம்.எல்.ஏ.,வாக பொன்முடி தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு கவர்னர் மாளிகைக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.
ஆனால், அவசர பயணமாக கவர்னர் ரவி டெல்லி சென்றுவிட்டதால் பதவியேற்பு தள்ளிப் போனது. இந்தநிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து, ஸ்டாலினுக்கு ஆர்.என்.ரவி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், தண்டனையைத் தான் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதே தவிர, அவர் குற்றவாளி இல்லை என தீர்ப்பு அளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு எம்.எல்.ஏ., இல்லை என்பதற்காக இந்த தீர்ப்பை அளித்திருக்கலாம். பொன்முடி நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவில்லை. எனவே, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது' என, கவர்னர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, கவர்னரின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. பொன்முடியை அமைச்சராக பதவியேற்பு நிகழ்வை நடத்த, கவர்னருக்கு உத்தரவிடுமாறு கோரி இந்த மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
வாசகர் கருத்து