பா.ஜ., கதவடைப்பு; இ.பி.எஸ். கறார்; கூட்டணி கட்சிகள் தவிப்பு

அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில், கறார் காட்டுவதால், கூட்டணி முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., சில மாதங்களுக்கு முன் வெளியேறியது. 'இனி, தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை' என்று அறிவித்த பழனிசாமி, அ.தி.மு.க., தலைமையில், தி.மு.க., கூட்டணியில் இல்லாத கட்சிகளை இணைத்து, மெகா கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டார்.

இதற்காக ஏற்கனவே கூட்டணியில் இருந்த, பா.ம.க., - தே.மு.தி.க., - புதிய தமிழகம் - அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி - புரட்சி பாரதம் - எஸ்.டி.பி.ஐ., கட்சி களுடன் பேச்சு நடந்து வருகிறது. இவற்றில், பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., கட்சிகள், பா.ஜ., உடனும் ரகசிய பேச்சு நடத்தி வருகின்றன.

கண்டிப்பாக கிடையாது



பா.ம.க., தரப்பில், 10 லோக்சபா தொகுதி, ஒரு ராஜ்யசபா தொகுதி கேட்கப்பட்டது. அதே அளவு தே.மு.தி.க., சார்பிலும் வலியுறுத்தப்பட்டது. அ.தி.மு.க.,வும் பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக, அக்கட்சிகளுடன் வலியச் சென்று பேச்சு நடத்தியது. தற்போது பா.ஜ., அக்கட்சிகளின் எதிர்பார்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதை அறிந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பா.ம.க.,வுக்கு ஆறு அல்லது ஏழு தொகுதிகள்; தே.மு.தி.க.,வுக்கு மூன்று தொகுதிகள் மட்டுமே தர முடியும் ராஜ்யசபா சீட் கண்டிப்பாக கிடையாது என, கறாராக கூறியுள்ளார்.

ஆனால், அவ்விரு கட்சிகளும் ராஜ்யசபா சீட் பெறுவதில் விடாப்பிடியாக உள்ளன. எனவே, பேச்சில் இழுபறி நீடிக்கிறது. பா.ஜ.,வை பொறுத்தவரை, அக்கட்சிகள் நிபந்தனையின்றி வந்தால் பேசலாம்; இல்லையெனில் கூட்டணி வேண்டாம் என்ற முடிவில் உள்ளது.

ஏற்கனவே தி.மு.க., கூட்டணியில் வாய்ப்பில்லாத நிலையில், பா.ம.க.,வும்; தே.மு.தி.க.,வும் தங்கள் கூட்டணிக்கு தான் வந்தாக வேண்டும். எனவே, அவர்கள் இழுப்பிற்கு செல்ல வேண்டாம் என்ற முடிவுக்கு அ.தி.மு.க., வந்துள்ளது. இது, அவ்விரு கட்சிகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

எங்கள் பொதுச்செயலர் பழனிசாமியை பொறுத்தவரை, ஒரு முடிவெடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருப்பார். பா.ஜ., வேண்டாம் என முடிவெடுத்த பின், துாதுவர்களாக வந்த முக்கியஸ்தர்கள் பலர் பேசியும் தன் முடிவிலிருந்து மாறவில்லை. கூட்டணிக்கு கட்சிகள் வந்தால் பேசுவோம். இல்லையெனில் நாம் தனித்து போட்டியிடுவோம் என்றே கூறினார்.

எதிர்பார்ப்பு அதிகம்



இரண்டாம் கட்ட தலைவர்கள், கூட்டணியை வலியுறுத்தியதால், பா.ம.க., - தே.மு.தி.க., மற்றும் சிறிய கட்சிகளுடன் பேச, சம்மதம் தெரிவித்தார். அந்தக் கட்சிகளின் எதிர்பார்ப்போ அதிகமாக உள்ளது.

கூட்டணிக்கு கட்சிகளுக்கு, 10 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, 30 தொகுதிகளில் அ.தி.மு.க.,வை போட்டியிட வைப்பதே, பழனிசாமியின் எண்ணம்.

அதற்கேற்ப பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., உடன் பேச்சு நடக்கிறது. மற்ற சிறிய கட்சிகளுக்கு ஒரு இடம் ஒதுக்கி, அவர்களை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., உடனான பேச்சு சுமூகமாகவே உள்ளது. விரைவில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்