Advertisement

தேர்தல் குறைபாடுகளைத் தீர்க்கும் வழி என்ன?

எல்லா விதமான தீமைகளும் வளர்வதற்குரிய வாய்ப்புகளை, இன்றைய தேர்தல் முறை உருவாக்கி தந்து கொண்டே இருக்கிறது. 1952ல் தொடங்கிய முதல் தேர்தல் முதல் இன்று வரை.

தேர்தலின் வாயிலாக, ஜனநாயக தார்மீக பண்புகள், வளர்ச்சி பெற்றுள்ளதா அல்லது தோல்வி அடைந்துள்ளதா என, ஆராய்ந்து பார்த்தால், மிக மோசமாக தோல்வி அடைந்துள்ளதை, அனைத்து குடிமக்களாலும் உணர முடிகிறது. இதற்கு அடிப்படையான காரணம், ஜனநாயகத்தை புறக்கணித்துள்ள, நம் தேர்தல் முறைகளே என்பதை, ஆதாரத்தோடு கூறமுடியும்.நம் தேர்தல் முறையில், அடிப்படை ஜனநாயகம் இல்லை என்று கூறமுடியுமா என்ற, கேள்வி எழலாம்.

இவ்வாறு கூற காரணங்கள் இருக்கின்றன. நாடு முழுதும், தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஓட்டுகளையும், தோல்வி அடைந்த கட்சிகளின் ஓட்டுகளையும் கணக்கிட்டு பார்த்தால், தோல்வியடைந்த கட்சிகளின் ஓட்டுகள் கூடுதலாக இருப்பதை அறியலாம். இது, எத்தகைய முரண்பாடானது?

எல்லா காலங்களிலும், ஆட்சி அமைக்கும் கட்சி வாங்கிய ஓட்டுகள், பதிவான மொத்த ஓட்டுகளில், சரிபாதியை கூட எட்டிப் பிடித்ததில்லை. எதிர்க்கட்சிகள் தனித்தனியாக வாங்கிய, ஓட்டுகளின் எண்ணிக்கை தான், ஆளும் கட்சியை விட கூடுதலாகவே இருந்துள்ளன. இன்னமும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், வெற்றி பெற்றவர்களின் ஓட்டுகள் மட்டும் தான், தேர்தலில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. தோல்வி அடைந்தவர்களின் ஓட்டுகள் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. பெரும் எண்ணிக்கையிலான இந்த ஓட்டுகளுக்கு, எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. இவை, ஜனநாயகத்தில் நிராகரிக்கப்பட்ட ஓட்டுகளாக அமைந்து விடுகின்றன.

இந்த பெரும்பான்மையான ஓட்டுகளை நிராகரித்து, செல்லாத ஓட்டுகளை போல கணக்கிட்டு கொள்ளும் தேர்தலை, எவ்வாறு ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட தேர்தல் முறையாக கருத முடியும்?

ஜனநாயகத்தில் ஒவ்வொரு ஓட்டுக்கும், ஒரு மதிப்பு இருக்க வேண்டும். இந்த ஓட்டுகள் ஒவ்வொன்றும், கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதை விடுத்து, வெற்றி பெற்ற ஓட்டுகளை மட்டும், கணக்கில் எடுத்துக் கொள்வேன் என்ற, தேர்தல்முறை எவ்வாறு உண்மையான ஜனநாயகத்தை பிரதிபலிக்க முடியும்?

இதற்கான தீர்வுகளை, பிரெஞ்சு புரட்சிக்கு பின் உருவான ஜனநாயக யுகத்தில், ஐரோப்பிய நாடுகள், பல ஆண்டுகள் முயன்று கண்டு பிடித்துள்ளன. உலகில் பெரும்பான்மையான நாடுகள் பின்பற்றும், இந்தத் தேர்தல் முறைக்கு, அரசியல் கட்சிகளின், 'விகிதாச்சார தேர்தல் முறை' என்று பெயர். மக்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டையும் கணக்கிட்டு, அதற்கேற்ப எல்லா அரசியல் கட்சிகளுக்கும், பிரதி நிதிகளை பகிர்ந்தளிக்கும் தேர்தல் முறை இது.

நம் தேர்தல் முறையில் வளர்ந்துள்ள மற்றொரு தீமை, கற்பனை செய்து பார்க்க முடியாத, குரூரங்களை கொண்டுள்ளது. இன்றைய ஆட்சி அதிகாரம், பணபலம் மற்றும் குற்றப் பின்னணி உடைய அரசியல்வாதிகளால் நடத்தப்படுகிறது. அரசியல் அதிகாரத்தின் வாயிலாக, பெரும் தொகையை திரட்டி கொள்வதும், மீண்டும் தேர்தலில் அதனை செலவழித்து, ஆட்சியை கைப்பற்றிக் கொள்வதும் என்ற, தீய சுழற்சியே தேர்தலில் பின்பற்றப்படுகிறது.

பணபலம் இல்லாத வேட்பாளர்களோ, பணபலம் இல்லாத அரசியல் கட்சிகளோ, தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறுதல் என்பது சுலபமானது அல்ல. இந்திய குடிமக்கள் அனைவரும், தேர்தலில் போட்டியிடலாம் என அறிவித்து விட்டு, பணம் உள்ளவர்கள் மட்டுமே, தேர்தலில் நிற்க முடியும் என்ற, நிர்ப்பந்தத்தை தருவது, ஒரு ஜனநாயக மோசடித்தனம் அல்லவா?

பணம் திரட்டுதல் அனைத்தும், தேர்தல் சார்ந்ததாகவே இருக்கிறது. இதற்காக நடைபெறும் வழிமுறைகள், மிகுந்த அறுவெருப்பை தருகின்றன. சட்டத்திற்குப் புறம்பாக, பணம் திரட்டும் அனைத்து வழிகளுக்கும், அரசியல் கட்சிகள் பாதுகாவலராகவே மாறி விடுகின்றன.

இதன் வாயிலாக, சமூக விரோத சக்திகளுக்கும், ஆளும் அரசியல் வட்டாரத்திற்கும் இடையில், ஒரு புனிதக்கூட்டு உருவாகி விடுகிறது.ஜாதி, மத மோதல்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான தாக்குதல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என, பல்வேறு குற்றங்களுக்கும், இதன் வாயிலாக, பாதுகாப்பு கிடைத்து விடுகிறது.

அரசியலின் குற்றப் பாரம்பரியம், இதன் வாயிலாக, வலிமை பெற்றுக் கொண்டே செல்கிறது.இந்த குற்றப் பாரம்பரியம் உள்ள அரசியலை, தேர்தலில் இருந்து களைந்து எறிய, பார்லிமென்டால் ஒரு குழு அமைக்கப்பட்டு, 1998ம் ஆண்டு, வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த தேர்தல் சீர்திருத்த குழுவின், தலைமை பொறுப்பை இந்திரஜித் குப்தா ஏற்றிருந்தார்.

அந்தக் குழு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவை, அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன் வாயிலாக மட்டுமே, குற்ற அரசியல், தேர்தல் களத்தில் நுழைவதை தடுக்க முடியும் என்பதையும், எளிய மக்களின் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் நுழைய முடியும் என்பதையும் தெரிவித்தது. விகிதாச்சார தேர்தல் முறையையும், தேசிய, மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் செலவை, அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் முறையையும், இந்திய தேர்தல் முறையில் செயல்படுத்தினால், நம் ஜனநாயகத்தில், மிகப் பெரிய மாற்றங்களை கொண்டு வரமுடியும் என்று நம்புகிறேன்.

- சி.மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்