நாற்பதும் வென்றால் தான் மத்தியில் அரசியல் மாற்றம் : ஸ்டாலின்

"எண்ணிக்கை முக்கியம் அல்ல, எண்ணம் தான் முக்கியம் என்பதை கூட்டணிக் கட்சிகள் உணர்ந்துள்ளன" என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிவடைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட பா.ஜ., அரசு, நாட்டை பல்லாண்டு காலம் பின்னோக்கிக் கொண்டு போய்விட்டது. இதனை இப்போது தடுக்காவிட்டால் இனி எப்போதும் தடுக்க முடியாது என்ற எண்ணத்தில் தான் இந்தியா முழுவதும் அணி சேர்க்கை நடைபெற்றது.

பா.ஜ.,வை வீழ்த்துவது என்பது மட்டுமல்ல, அதன் பிறகு அமையப் போகும் அரசு, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மாநில உரிமைகள், விளிம்புநிலை மக்களின் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டாட்சி அரசாக அமைய வேண்டும். இந்த நோக்கத்துடன் 'இண்டியா' கூட்டணி அமைந்தது.

தங்களை எதிர்ப்பதற்கு யாரும் இல்லை என்ற எண்ணத்துடன் இருந்த பா.ஜ., அதன் பிறகுதான் கள நிலவரத்தை உணர்ந்தது. 'இண்டியா' என்ற சொல்லையே சொல்லாமல் தவிர்த்தது. 'இண்டியா' கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளைத் தன்னுடைய அதிகார அமைப்புகளின் மூலமாக வேட்டையாடியது.

10 ஆண்டுகளுக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஆட்சி முடியப் போகும் நிலையில் மாநிலம் மாநிலமாக சென்று திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அவரது அவசர கால பதற்றம், அவர் முகத்தில் இருக்கும் பயத்தைக் காட்டுகிறது. 'மீண்டும் மோடி' என்று அவரது ஆதரவாளர்கள் எவ்வளவு கூச்சல் எழுப்பினாலும், 'வேண்டாம் மோடி' என்ற முழக்கமே இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.

பா.ஜ., வீழ்த்தியாக வேண்டும் என்ற அரசியல் நோக்கம் 'இண்டியா' கூட்டணி கட்சிகளால் மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. பா.ஜ., எதிரான வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தையையும் தொடங்கி நடத்தி வருகிறார்கள். சில மாநிலங்களில் பேச்சுவார்த்தைகள் முடிவுற்று, தொகுதிப் பங்கீடுகள் முடிந்துவிட்டன.

தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நேற்றுடன் சிறப்பாக முடிவுற்றது.

இந்த அணிக்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய இருப்பதாக கமல் அறிவித்துள்ளார். 2025ல் ராஜ்யசபாவில் அவரது கட்சியின் குரல் ஒலிக்க இருக்கிறது.

நாங்கள் கொடுத்தோம், அவர்கள் பெற்றார்கள் என்பதாக இல்லாமல், 'அனைவரும் ஒத்த சிந்தனையுடன் அமர்ந்து பேசித் தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டோம்' என்பதுதான் உண்மை. அனைத்துத் தலைவர்களும், ஊடகங்களில் அளித்த பேட்டிகளில் இதனை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்கள்.

எண்ணிக்கை அல்ல, எண்ணம்தான் முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள். இந்த ஒற்றுமை உணர்வு தான் 2019-ம் ஆண்டு முதல் தமிழகத்தின் அனைத்து வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்தது.

தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறும் என்பதை மாற்றி, இலக்கு ஒன்றாக இருந்தால் கூட்டணியும் மாறாது என்பதையும் நிரூபித்து வருகிறோம். இதனைத்தான் 'இந்தியா' கூட்டணியின் தொடக்கக் கூட்டத்தில் வலியுறுத்திச் சொன்னேன். பா.ஜ., எதிரான கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும், அதுதான் இன்று மாபெரும் கூட்டணியாக மலர்ந்துள்ளது.

புதுவை உள்ளிட்ட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும், 'வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உணர்ந்து அனைத்து தொண்டர்களும் தேர்தல் வேலை பார்க்க வேண்டும்.

நாற்பதுக்கு நாற்பது என்ற அளவில் வென்றால்தான் நாம் நினைக்கும் அரசியல் மாற்றம், மத்திய அரசில் நடக்கும். மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசை அமைக்க வேண்டுமானால் இங்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்