Advertisement

24 மணி நேரமும் உழைக்க வாருங்கள்: மோடி அழைப்பு

முதல்கட்ட லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பாஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளபிரதமர் நரேந்திர மோடி, 'என் உறுதிமொழியை ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் தெரிவியுங்கள்' என கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கும் முதல் கட்ட தேர்தல் நாளை நடக்க உள்ளது.

அதில் போட்டியிடும் பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு, பிரதமர் மோடி தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளார்.

விருப்பம்

அதில் அவர் கூறியுள்ளதாவது:

இந்த தேர்தலில், மக்களின் ஆசியுடன் நீங்கள் அனைவரும் நிச்சயம் வெற்றிபெற்று பார்லிமென்ட் வருவீர்கள். உங்களைப் போன்றவர்கள்தான் என்னுடைய மிகப் பெரிய சொத்து. தொகுதி மற்றும் நாட்டின் நலனுக்கான எந்த விஷயத்தையும் விடாமல் செய்வோம். இது ஓர் சாதாரண தேர்தல் அல்ல என்பதை உங்கள் தொகுதி மக்களுக்கு உங்கள் வாயிலாக தெரியப்படுத்த விரும்புகிறேன்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மூத்த குடிமக்கள் பட்ட துயரங்களை நினைத்து பார்க்க வேண்டும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற பல பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதுபோல், இன்னும் நிறைய செய்ய வேண்டும். நாட்டில் உள்ள அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கான பணியில் தீர்க்கமாக இருங்கள்.

நம் நிகழ்காலத்தை, ஒளிமயமான எதிர்காலத்துடன் இணைக்க, இந்த தேர்தல் ஒரு வாய்ப்பு. பா.ஜ., மற்றும் நம் கூட்டணி கட்சிகளுக்கு கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டும், நிலையான அரசு அமைப்பதை உறுதி செய்யும்.

கூடவே 2047ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறுவதற்கான பயணத்தின் அங்கமாகவும் இருக்கும்.

அர்ப்பணிப்பு

உங்கள் ஆரோக்கியமும், உங்களைச் சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். கோடை வெயில் தீவிரமாக உள்ளது என்பதை அறிவேன்.

இருப்பினும், இந்த தேர்தலில் நம் தேசத்தின் எதிர்காலம் மிகவும் முக்கியமானது.

ஆகையால், வெயிலின் தாக்கம் துவங்கும் முன் காலையில் சென்று ஓட்டளியுங்கள்.

என் வாக்குறுதிகளை ஒவ்வொரு வாக்காளருக்கும் தெரிவியுங்கள். என் நேரத்தின் ஒவ்வொரு தருணமும், என் சக குடிமக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் தேர்தலில் வெற்றி பெற என் வாழ்த்துகள். இது மோடியின் உத்தரவாதம். 2047க்காக, 24 மணிநேரமும் இடைவிடாது பணிபுரிவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு, அவரவர்களின் மாநில மொழியிலேயே இந்த கடிதத்தை பிரதமர் மோடி எழுதி உள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்