மாணவர்கள் காட்டில் மழை: தினசரி ரூ.750 + உணவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, அத்தனை அமைச்சர்களும் ஈரோட்டில் குவிந்து, தங்களது ஆட்கள் மற்றும் மாணவர்களை வைத்தே பல பணிகளை செய்து முடித்தனர். இந்த தேர்தலிலும் அதே பாணியை பின்பற்றி வருகின்றனர்.

தி.மு.க., தேர்தல் பணி செய்யும் நிர்வாகி கூறியதாவது:

ஆறு சட்டசபை தொகுதிகளிலும் ஒன்றுபோல, பிளக்ஸ், நோட்டீஸ், பேனர், தேர்தல் பணி செய்வோர் எண்ணிக்கை, பெயர் விபரம் என பலவும் கணினியையும், பணத்தையும் நம்பி உள்ளது.

இதனால், இடைத்தேர்தல் யுக்திப்படி, தற்போது கல்லுாரி மாணவர்களை வைத்து, இப்பணிகளை மேற்கொள்கிறோம். தொகுதிக்கு, 200 பேர் வரை தயார் செய்துள்ளோம்.

ஒவ்வொரு தொகுதியிலும், அந்தந்த பகுதி மாணவர்களை தேர்வு செய்து, குறிப்பிட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து, இவற்றை செயல்படுத்துகின்றனர்.

மாவட்ட அளவில் போன் எண்கள், பேஸ்புக், வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஆடியோக்கள், வீடியோக்கள் பரப்பும் பணிக்கு, மாணவர்களை ஈடுபடுத்தி வருகிறோம்.

தேர்தல் பணி சூடுபிடிக்காத நிலையில் தினமும், 750 ரூபாய், 3 நேர உணவு, காபி, டீ, ஸ்நாக்ஸ் ஆகியவை வழங்கி விடுவோம். மடிக்கணினி, அதற்கு வைபை வசதி கொடுத்துள்ளோம். அவர்களது மொபைலுக்கு சிறிய தொகையில் ரீசார்ஜ் செய்து விடுகிறோம்.

பைக் அல்லது காருக்கு தேவையான பெட்ரோல் போட்டு கொடுக்கிறோம். கட்சியினரைவிட, அவர்கள் வாயிலாக நேர்த்தியாக, விரைவாக பணி நடக்கிறது.

வேட்புமனு தாக்கல் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின், இவர்களுக்கு தினமும், 1,000 ரூபாய் தர திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது வரை, ஓட்டுச்சாவடி வாரியாக வாக்காளர் விபரம், அவர்களது போன் எண் போன்றவற்றை வைத்து, அவர்களை நேரடியாக தொடர்பு கொள்கின்றனர்.

ஒவ்வொரு தெருவுக்கும், குறிப்பிட்ட பகுதிக்கும் சென்று தேர்தல் பணி செய்வோருக்கு, வாக்காளர் விபரம், யாரை சந்திக்க வேண்டும் என்ற விபரங்கள் அடங்கிய தரவுகளை அவர்களே தயார் செய்து தருகின்றனர். வாக்காளர்களை கவனிப்பது வரை இவர்களை வைத்து நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு கூறினர்.

இதேபோல அ.தி.மு.க.,வினரும் மாணவர்களை வைத்து தேர்தல் பணி செய்து வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)