கூட்டணி பேச குழு அமைத்தும் தி.மு.க., தாமதப்படுத்துகிறது: காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் விமர்சனம்
மதுரை: ''கூட்டணி குறித்து பேச காங்கிரஸ் மேலிடம் குழு அமைத்தும், தி.மு.க., தாமதப்படுத்துகிறது; 36 நாட்களாக காத்திருக்கிறோம்,'' என காங்., --- எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
மதுரை திருநகரில் நேற்று அவர் அளித்த பேட்டி: மதுரை 'எய்ம்ஸ்' பணிகள் குறித்து செய்தியாளர்களை அழைத்து ஆய்வு செய்ய, இயக்குநரிடம் பேசி உள்ளோம். கட்டட பணிகள் விரைவாக நடப்பதாகவும், நிறைவடைந்த பின்னர் திறப்பு விழா நடக்கும் எனவும் ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போது கட்டி முடிக்கப் போகின்றனர்; எப்போது முழுமை பெறும்; ராமநாதபுரத்தில் இருந்து மாணவர்கள் எப்போது இங்கு மாற்றப்படுவர் என்பதற்கெல்லாம், மதுரை பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பதில் கூற வேண்டும்.
தி.மு.க.,வுடன் தேர்தல் கூட்டணி பேச, காங்., தலைமை கடந்த டிச., 1ல் குழு அமைத்து விட்டது. கிரிஷ் ஷோடங்கர் தலைமையிலான காங்., குழு, 36 நாட்களாக காத்திருக்கிறது.
ஆனால், தி.மு.க., இன்னும் குழு அமைக்கவில்லை. நாங்கள் 36 நாட்களாக பொறுமையுடன் காத்திருக்கிறோம்.
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் வாயிலாக, நம் விவசாயிகளை பிரதமர் மோடி அடகு வைத்து விட்டார். பார்லிமென்டில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, அமெரிக்க ஒப்பந்தம் குறித்து விரிவாக பேச வேண்டும்.
லோக்சபாவில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்காததை கண்டித்து, மைய மண்டபத்தில் போராடும் சூழல் ஏற்பட்டது.
இதற்கு தண்டனையாக, எட்டு எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பேச அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement


வாசகர்கள் கருத்துகள் (0)