திருப்பூர்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிக்கு திமுக அரசு எவ்வளவு தாமதம் செய்ய முடியுமோ அவ்வளவு தாமதம் செய்தது. அதனை தாண்டி மத்திய அரசு அதனை கொண்டு வந்துள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.திருப்பூர் வளர்ச்சி
திருப்பூரில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆக உள்ளது. ஐரோப்பிய யூனியனோடு கையெழுத்தாகி உள்ளது. இந்த இரண்டும் மிக மிக முக்கியம். இதனால், திருப்பூர் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை பார்க்கப் போகிறது. 5 லட்சம் பேருக்கு கூடுதலாக வேலை கிடைக்கும். ஏற்றுமதி 60 ஆயிரம் கோடி ரூபாய் ஆக உயரும்.கேசவ விநாயகன் சிறப்பான பணி
கேசவ விநாயகன் நீண்ட காலமாக பணி செய்த அமைப்பு பொதுச்செயலாளர். நிறைய தேர்தலை சந்தித்து உள்ளார். கடுமையாக உழைக்கக்கூடியவர். எளிமையாக வாழக்கூடியவர். அவர் ஆர்எஸ்எஸ் பிரசாரகர் ஆக இருந்தார்.ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து கொடுக்கப்பட்டார். அவரை மீண்டும் எடுத்துக் கொண்டு வேறொரு பொறுப்பு கொடுத்து உள்ளனர். முக்கியமான பொறுப்பு கொடுத்துள்ளனர். கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தமிழகத்தில் அமைப்பு பொதுச்செயலாளர் இல்லை. இது புதிய விஷயம் இல்லை. நூற்றாண்டு விழா கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் திறமைவாய்ந்தவர்கள் தேவை. அவரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். அவர் அரசியல்வாதி கிடையாது. அவர் குறித்த சர்ச்சை முடிவுக்கு வரும் என நம்புகிறேன்.முதல்வர் சென்றாரா
மதுரையில் எய்ம்ஸ் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.அந்த மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு உள்ளாரா? முதல்வர் கீழ் மதுரை வராதா? எத்தனை முறை மதுரை சென்றுள்ளார். மருத்துவமனையில் நடக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு இருக்கலாம். அதில், தாமதம் இருந்தால் அமைச்சரை அழைத்து பேசியிருக்கலாம். எய்ம்ஸ் மருத்துவமனை வரக்கூடாது என்பதற்காக நான்கு ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் வேலைபார்த்தார்.மரம் வெட்டுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. மரத்தை வெட்ட லைசென்ஸ் கொடுக்க ஒன்றரை வருடம் தாமதம். நிலம் எடுக்க தாமதம். மாநில அரசு எவ்வளவு தாமதம் செய்ய முடியுமோ, எவ்வளவு மோசமாக தாமதம் செய்ய முடியுமோ, பஞ்சாயத்து முதல் அனைத்து துறைகளையும் வைத்து செய்தனர். அத்தனையும் தாண்டி எய்ம்ஸ் நிற்கிறது. மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாமல், எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. சட்டசபையிலும், மேடையிலும் மட்டும் பேசும் அக்கறை இல்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.பனிப்போர் கிடையாது
தேஜ கூட்டணி விரிவடைந்து கொண்டு செல்கிறது. இன்னும் நாட்கள் உள்ளது. கூட்டணியில் சேராத கட்சிகள் முடிவெடுத்து திமுகவை வீழ்த்துவதற்காக தேஜ கூட்டணியில் இணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நயினாருக்கும் எனக்கும் பனிப்போர் கிடையாது. கட்சி சொல்லும் வேலைகளை செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.