'உதிக்காத' சூரியன்; உடன்பிறப்புகள் ஆதங்கம்!

டெல்டா மாவட்டங்களில் இருக்கும் ஆறு லோக்சபா தொகுதிகளிலும், தென் மாவட்டங்களில் இருக்கும்10 லோக்சபா தொகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் இம்முறை தி.மு.க., போட்டியிடவில்லை. குறிப்பாக, தென் மாவட்டங்களில் ராமநாதபுரம் துவங்கி, கன்னியாகுமரி வரையிலான 10 தொகுதிகளில் மூன்றில் மட்டுமே இம்முறை தி.மு.க.,போட்டியிடுகிறது.

நெருக்கடி



அதேபோல, டெல்டா மாவட்டங்களில் திருச்சி துவங்கி கடலுார் வரையிலான ஆறு லோக்சபா தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் இம்முறை தி.மு.க., போட்டியிடுவது, தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இருக்கும் அக்கட்சியினரை மிகுந்த கவலைக்குள்ளாக்கிஇருக்கிறது.

இது குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர்கூறியதாவது:

ஏற்கனவே அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இருந்த வரை, தி.மு.க., கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டுஅ.தி.மு.க., விலகிய பின், அக்கட்சி தன் தலைமையில் ஒரு மெகா கூட்டணியை கட்டமைக்க முயன்றது.

அதனால், தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்கிரசும், விடுதலை சிறுத்தைகளும் அ.தி.மு.க., தரப்பிடம் ரகசிய பேச்சு நடத்தின.

'இண்டியா' கூட்டணியை தமிழகத்தில் வலுவானதாக கட்டமைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதனால், காங்., மற்றும் வி.சி., கட்சியினரோடு தேர்தல் பங்கீட்டு விவகாரத்தில் பல படிகள் கீழ் இறங்கி பேச்சு நடத்த வேண்டியதானது.

ஏற்கனவே பெற்று இருந்த எண்ணிக்கையிலேயே இந்தத் தேர்தலுக்கும் கூட்டணியில் இருந்த அனைத்துக் கட்சிகளும் பெற்றுக் கொண்டாலும், கடைசி வரை குறிப்பிட்ட சில தொகுதிகளை மாற்றி கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தன.

முறியடித்த ஸ்டாலின்



இதனால், ஸ்டாலின் நிறைய இறங்கி வந்தார். கூட்டணி கட்சியினர் கேட்டத் தொகுதிகளையெல்லாம் விட்டுக் கொடுத்தார். இறுதியில் மிச்சப்பட்டத் தொகுதிகளில் தான் தி.மு.க., நிற்க வேண்டியதானது.

இதனாலேயே, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார், சிதம்பரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் இருக்கும் ஆறு தொகுதிகளில் தஞ்சாவூரில் மட்டுமே தி.மு.க., போட்டியிட வேண்டியதானது.

அதேபோல ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென் காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 தென் மாவட்டத் தொகுதிகளில் தென்காசி, தேனி, துாத்துக்குடி உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.

அதனால், தி.மு.க.,வால் இந்த முறை தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் அதிக தொகுதிகளில் போட்டியிட முடியாமல் போய் விட்டது.

தன் தலைமையில் அமைத்திருக்கும் அணி வலுவானதாக அமைய வேண்டும் என்பதோடு, தி.மு.க., கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தவும் பழனிசாமி சிலரிடம் ரகசிய பேச்சு நடத்தினார்.

ஆனால், அதை முறியடிக்கும் விதமாக ஸ்டாலின், கூட்டணி கட்சியினரிடம் சாதுர்யமாகப் பேசி, கூட்டணி பங்கீட்டை பெரிய சிக்கல் இல்லாமல் முடித்து விட்டார்.

ஆனால், தொகுதி பங்கீட்டில் காங்., முரண்டு பிடிக்க மயிலாடுதுறை, கடலுார், திருநெல்வேலி உள்ளிட்ட வலுவாக இருக்கும் சில தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட முடியாமல் போய் விட்டது.

இது பல தொகுதிகளில் இருக்கும் தி.மு.க.,வினரை உற்சாகம் இழக்கச் செய்து உள்ளது.

இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)