Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க.,வினரிடம் சபரீசன் பஞ்சாயத்து

 சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க.,வினரிடம் சபரீசன் பஞ்சாயத்து
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

'சட்டசபை தொகுதி வாரியாக, உட்கட்சி பூசலில் சிக்கி தவிக்கும் நிர்வாகிகளை அழைத்து, ஒற்றுமையாக தேர்தல் பணியில் ஈடுபட்டு, வெற்றி தேடி தர வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் அறிவுறுத்தி வருகிறார்.
தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க.,வின் 'பென்' நிறுவனம் தரப்பில், 'தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு, மீண்டும் அதே தொகுதி கொடுத்தால், வெற்றி கிடைக்குமா; கூட்டணியிலிருந்து காங்., வெளியேறினால் ஏற்படும் பாதிப்பு' என, சமீபத்தில் 'சர்வே' எடுக்கப்பட்டது.
அந்த சர்வேயில், கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறினால், கிள்ளியூர் தொகுதியில், ராஜேஷ்குமார் மட்டும் வெற்றி பெறுவார்.

தென் மாவட்டங்களில், சில தொகுதிகளில் காங்கிரஸ் ஓட்டுகள் அடர்த்தியாக உள்ளன. தேர்தல் பணியின் போது அத்தொகுதிகளில் பணம் செலவழித்தால், வெற்றி பெற முடியும் என, தெரிய வந்துள்ளது. இதையடுத்து, முதல் கட்டமாக, தென் மண்டலத்தில், வருவாய் மாவட்ட அடிப்படையில் சபரீசன், தன் சுற்றுப்பயணத்தை துவக்கி உள்ளார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, மதுரை மாவட்டங்களில், சட்டசபை தொகுதி வாரியாக, கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசி உள்ளார். அவர்களிடம், கட்சியின் உள்குத்து விவகாரங்களை கேட்டு, பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார். தென் மாவட்டங்களில், கட்சி ரீதியாக பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாகிய நிர்வாகிகள் மற்றும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை, உளவுத்துறை தயாரித்து கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் கட்சியினரை விசாரித்து, இனிமேல் தவறு செய்யாமல் இருங்கள் என, அறிவுரை கூறி உள்ளார்.
கோஷ்டி பூசலில் ஈடுபடுவோரை அழைத்து, அனைவரும் ஒற்றுமையாக தேர்தல் பணியில் ஈடுப்பட்டு, வெற்றியை தேடி தர வேண்டும். எதிர்க்கட்சி வேட்பாளர்களுடன் இணைந்து, உள்ளடி வேலை பார்ப்பதாக, புகார் வந்தால், தேர்தல் முடிவடைந்ததும் கட்சியிலிருந்து நீக்கப்படுவீர் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்பட்டால், மீண்டும் இரண்டாவது முறை ஆட்சி அமைந்த பின், தகுதி அடிப்படையில், உரிய பதவிகள் தேடி வரும் எனக் கூறி, கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

Advertisement