Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 ஐந்து மாநில தேர்தல் எப்போது: தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்

 ஐந்து மாநில தேர்தல் எப்போது: தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்

புதுச்சேரி: தமிழகம், கேரளம் உட்பட ஐந்து மாநிலங்களில் ஆலோசனை நடத்திய பின், சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தெரிவித்தார்.

புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்த், விவேக் ஜோசி உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர், சட்டசபை தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, அனைத்து கட்சி பிரதிநிதிகள், தலைமை செயலர், தலைமை தேர்தல் அதிகாரி, டி.ஜி.பி., மற்றும் தேர்தல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பின், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கூறியதாவது:

புதுச்சேரியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு, 23,033 முதல்முறை வாக்காளர்கள் உள்ளனர். வரும் சட்டசபை தேர்தலுக்காக இந்திய தேர்தல் கமிஷன், 20 சீர்திருத்தங்களை செய்துள்ளது. இம்முறை ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதியில்லை. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படம் கலரில் இருக்கும்; பெயர் பெரிதாக இருக்கும். ஓட்டுச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள் மிகாமல் இருக்கும். தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் இந்திய தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் பார்க்கலாம்.

புதுச்சேரியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி வெற்றிகரமாக நடந்துள்ளது. அசாமில் தேர்தல் கமிஷனர்கள் நேரிடையாக சென்று ஆலோசனை நடத்தியுள்ளோம். புதுச்சேரியில் இப்போது ஆய்வு செய்துள்ளோம். தமிழகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை செய்கிறோம்.

தொடர்ந்து கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் ஆலோசனை நடத்திய பின், ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நாளிலிருந்து பணம் மற்றும் பரிசு வழங்க முயல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களை கண்காணிக்க, குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு தமிழகத்தோடும், மாகேவிற்கு கேரளாவுடன் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை கமிஷன் கவனத்தில் கொள்ளும். வேட்பாளர்கள் ஆன்லைனில் மனு தாக்கல் செய்தாலும், குறித்த நாளில் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மனுவை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement