Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


மா.செ.,க்களை தனித்தனியாக அழைத்து வீட்டில் பழனிசாமி ரகசிய ஆலோசனை

மா.செ.,க்களை தனித்தனியாக அழைத்து வீட்டில் பழனிசாமி ரகசிய ஆலோசனை

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தனது இல்லத்தில் நேற்று, மாவட்டச்செயலர்களை தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அ.தி.மு.க., மாவட்டச்செயலர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

அதில், பழனிசாமி பேசியதாவது: தி.மு.க., கூட்டணி வலுவிழந்து விட்டது. தற்போதைய சூழலில், தே.ஜ., கூட்டணி வலுவாக இருக்கிறது. அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை, மக்களிடம் கொண்டு சென்றாலே, நாம் எளிமையாக வெற்றி பெறலாம். எனவே, தெருமுனை கூட்டங்களை நடத்துவதோடு, துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்யுங்கள். அதேபோல், பூத் கமிட்டியை செயல்பாட்டில் வையுங்கள்.
'விடியா ஆட்சி; உங்கள் வீட்டு பில்லே சாட்சி' என்ற நமது பிரசாரம், மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதையும் தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதை் தொடர்ந்து, பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில், மாவட்டச்செயலர்களுடன் பழனிசாமி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது, தேர்தலுக்கு ஆகும் மொத்த செலவு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதோடு, மாவட்டச்செயலர்களிடம் இருந்து இறுதி வேட்பாளர் பட்டியலையும் பழனிசாமி வாங்கினார்.
குறிப்பாக, சில மாவட்டச்செயலர்களிடம், தான் தயார் செய்து வைத்துள்ள வேட்பாளர் பட்டியலை கொடுத்து, 'இவர்தான் வேட்பாளர்' என, அறிமுகம் செய்துள்ளார். பழனிசாமியின் இந்த செயலால், பல மாவட்டச்செயலர்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.

வந்தார் தமிழ் மகன்!


அ.தி.மு.க., அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உடல் நலக் குறைவால் பல மாதங்களாக வீட்டிலும், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இதனால், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். இப்போது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், நேற்று நடந்த மா.செ.க்கள் கூட்டத்துக்கு நீண்ட நாளுக்கு பின் வந்தார்.



எழுதி கொடுத்த 'ஸ்கிரிப்ட்'


மாவட்ட செயலர்கள் கூட்டம் முடிந்த பின், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி: காங்கிரசை சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள், 'த.வெ.க.வுடன் கூட்டணி சென்றால், ராஜினாமா செய்து விடுவோம்' என, தலைமையை மிரட்டி உள்ளனர். அதனால்தான், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைந்திருக்கிறது. வரும் தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடைவது உறுதி என்பதால், அரசு பணத்தை வாரிவாரி இறைக்கிறது. ஸ்டாலினின் புழுகு தேர்தல் வரை மட்டும்தான். தமிழகத்தில் மீண்டும், அ.தி.மு.க., ஆட்சி அமையும். ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் எழுதி கொடுத்த 'ஸ்கிரிப்டை' மனப்பாடம் செய்து, விஜய் பேசுகிறார். ஒரு கைதேர்ந்த நடிகருக்கு வசனம் பேச சொல்லித் தர வேண்டியது இல்லை. என்னைபோல் 'தில்'லாக பத்திரிகையாளர்களை விஜய் சந்திக்க வேண்டும். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அழைத்தும், அவருடன் யாரும் செல்லவில்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால், சிறுபான்மை ஓட்டுகள் கிடைக்காது என்ற காலகட்டம் மாறி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement