'தாமரை' சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணி கட்சிகளை வலியுறுத்தும் பா.ஜ.,
சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகளை, தங்களின் தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு பா.ஜ., தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - த.மா.கா., - புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியில், 40 தொகுதிகளில் போட்டியிட பா.ஜ., முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம், பா.ஜ., நிர்வாகிகள் பேச்சு நடத்தியுள்ளனர். அப்போது, 'புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வர இருப்பதால், பா.ஜ.,வுக்கு 25 - 30 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியும்' என பழனிசாமி தெரிவித்தார்.
அந்த சமயத்தில், கூட்டணியில் தே.மு.தி.க., இணையும் என்று அ.தி.மு.க., எதிர்பார்த்தது. ஆனால், தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்து விட்டது. இனி புதிய கட்சிகள் சேர வாய்ப்பு குறைவு என்பதால், அ.தி.மு.க., வசம் அதிக தொகுதிகள் உள்ளன. இதனால், பா.ஜ., முன்னர் எதிர்பார்த்தபடியே, 40 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும், கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு, 10 - 15 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. இந்த தேர்தலில், 50 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று பா.ஜ., மேலிட தலைவர்கள் விருப்பம் காட்டுகிகின்றனர். அதனால், சிறிய கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால், 50 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ., தரப்பில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கும்.
இது தொடர்பாக, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோரை கடந்த வாரம் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
அப்போது, தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவர்கள் தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட விரும்புவதால், பா.ஜ., தரப்பு குழப்பம் அடைந்து உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
Advertisement
தற்சமயத்திற்கு சின்னம் இப்போதைக்கு முக்கியமில்லை.தீயசக்தியை ஒழிப்பதுதான் குறிக்கோளாக இருக்கவேண்டும்.அப்போதுதான் தமிழகத்தை காப்பாற்ற முடியும்.

தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் மட்டும் அப்படியே வெற்றி பெற்றுத் தள்ளி விடுவார்களா?