/ செய்திகள் /  திருமங்கலத்தில் சபரீசன் போட்டியிட தயாரா; சவால் விடுகிறார் உதயகுமார்

 திருமங்கலத்தில் சபரீசன் போட்டியிட தயாரா; சவால் விடுகிறார் உதயகுமார்

மதுரை: ''எனது திருமங்கலம் தொகுதியில் சபரீசன் போட்டியிட தயாரா. அவரது நாடகம் தென்தமிழகத்தில் எடுபடாது'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதய குமார் சவால் விடுத்தார். தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் தி.மு.க., அரசை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் உதயகுமார் பேசியதாவது: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வந்து 20 ஆண்டுகளாகி விட்டது. தற்போது காலத்துக்கு ஏற்ப மாற்றுவது மரபு. இத்திட்டம் மூலம் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும். இத்திட்டத்தில் தி.மு.க., முறைகேடு செய்ய முடியாது. அதனால்தான் எதிர்க்கிறது. தென் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள தி.மு.க., வின் 'சர்வேயர் புலி' முதல்வரின் மருமகன் சபரீசன் மதுரையில் 10 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என கூறியுள்ளார். எனது திருமங்கலம் தொகுதியை தனியாக கவனிக்க கூறியுள்ளார். தைரியம் இருந்தால் அவர் திருமங்கலம் தொகுதியில் நிற்க முடியுமா. அவர் கருணாநிதி குடும்பத்தில் எப்படி நுழைந்தார். அவரது பொது வாழ்க்கை என்ன என மக்களுக்கு தெரியும். சபரீசனுக்கும் மக்கள் சேவைக்கும் என்ன சம்பந்தம். கனிமொழி வீட்டுக்குள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தி 'நானும் ரவுடி' என்பது போல், நானும் உழைக்கிறேன் என்ற அவரது நாடகம் தென் தமிழகத்தில் எடுபடாது. இவ்வாறு பேசினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
பிப் 14, 2026 11:41

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு K.N. நேரு அவர்களுக்கு – பொதுமக்களின் வேண்டுகோள் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வணக்கம். மதுரை மாவட்டம் – திருமங்கலம் மட்டுமன்றி, பிற மாவட்டங்களிலும் குடிநீர் இணைப்பு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நீண்டகால தாமதம் குறித்து பொதுமக்களின் கவலைக்குரிய நிலையை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். அரசு குடிநீர் திட்டத்தின் கீழ் பல வீடுகளுக்கு புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சில தகுதியான வீடுகள் மட்டும் காரணமின்றி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பல முறை எழுத்து மூலம் மற்றும் ஆன்லைன் முறையிலும் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தும், இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. இந்நிலை சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது: • ஏன் சில இணைப்புகள் மட்டும் தவிர்க்கப்படுகின்றன? • இரண்டு ஆண்டுகளாக தாமதம் ஏற்பட்டதற்கான பொறுப்பேற்பு எங்கு? • குடிநீர் வழங்கப்படாத நிலையிலும் ஏன் வரி வசூல் தொடர்கிறது? குடிநீர் என்பது அத்தியாவசிய அடிப்படை உரிமை. வழங்கப்படாத சேவைக்காக கட்டணம் வசூலிப்பது இயற்கை நீதி கொள்கைக்கு முரணானது. இத்தகைய தாமதம் நிர்வாக அலட்சியம் மற்றும் கண்காணிப்பு குறைபாட்டைக் காட்டுகிறது. எனவே, தாங்கள் நேரடியாக தலையீடு செய்து, நிலுவையில் உள்ள இணைப்புகளை உடனடியாக வழங்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்/ஒப்பந்ததாரர்களின் பொறுப்பை நிர்ணயிக்கவும், குடிநீர் வழங்காத காலத்திற்கான வரிகளை விலக்கு செய்யவும் உத்தரவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். பொதுநலன் கருதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். – கவலைக்கிடமான பொதுமக்கள்