Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


நள்ளிரவில் ரகசிய சந்திப்புகள்; வேணுகோபால் திட்டம் என்ன?

நள்ளிரவில் ரகசிய சந்திப்புகள்; வேணுகோபால் திட்டம் என்ன?

சென்னை வந்திருந்த காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபாலை, தி.மு.க., மற்றும் த.வெ.க., நிர்வாகிகள் ரகசியமாக சந்தித்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை வந்திருந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலர் வேணுகோபால், பல்லாவரத்தில் நேற்று முன்தினம் நடந்த பேரணி, முகப்பேர் மேற்கில் நடந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

அங்கிருந்து தன் காரில் புறப்பட்ட அவருடன், தமிழக காங்., பொருளாளர் ரூபி மனோகரன், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் சவுமியா ரெட்டி ஆகியோர் சென்றனர்.
அந்த காரை பின்தொடர்ந்து நான்கு கார்கள் வந்தன. அவற்றில் ஒரு காரில் பாதுகாப்புக்கான போலீஸ் அதிகாரி வந்தார். கோயம்பேடு வந்ததும், 'தனிப்பட்ட விஷயமாக செல்வதால், நீங்கள் கிளம்பலாம்' என பாதுகாப்பு அதிகாரியை, வேணுகோபால் அனுப்பி வைத்துள்ளார்.
அடுத்ததாக, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் சவுமியா ரெட்டியை இறக்கி விட்டுள்ளார். பின், அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா அருகில் ரூபி மனோகரனை இறக்கி விட்டுள்ளார்.
ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே வந்ததும், தன் காரிலிருந்து இறங்கி, வேறு ஒரு காரில் ஏறி பயணித்தார். முதலில், அவர் மீனம்பாக்கம் அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், இரவு தங்குவதாக கட்சி நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது; ஆனால், அங்கு தங்கவில்லை.
கேரள முன்னாள் முதல்வர் மகன் ஒருவரின் சென்னை வீட்டில் தங்கியுள்ளார்; நள்ளிரவில் அவரை, அந்த வீட்டில் தி.மு.க., மூத்த எம்.பி., ஒருவர் சந்தித்துள்ளார். அவரை தொடர்ந்து, த.வெ.க., மாநில நிர்வாகி ஒருவரும், தேர்தல் வியூக நிறுவன தலைமை நிர்வாகியும் சந்தித்து பேசியதாக தெரிகிறது.

இதற்கிடையில், வேணுகோபாலை சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி, மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவரும் கேட்டிருந்தார். அண்ணா சாலை அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு நேற்று காலை 8:00 மணிக்கு வரும்படி, அவருக்கு சொல்லப்பட்டது. அவர் அங்கு செல்லும் முன், அந்த ஹோட்டலில் இருந்து கிளம்பி, விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டலுக்கு சென்று விட்டார்.
அப்போது அவரை, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தன் காரில் அழைத்து சென்றுள்ளார். மாநில நிர்வாகிகள் ரூபி மனோகரன், சொர்ணா சேதுராமன் ஆகியோர் மட்டும் உடன் இருந்துள்ளனர்.

இந்நிலையில், தன்னை தொடர்பு கொண்ட தமிழக காங்., மூத்த தலைவரிடம், விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டலுக்கு வருமாறு கூறியுள்ளார் வேணுகோபால். ஆனால், அங்கு தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரை மட்டுமே சந்தித்து பேசியுள்ளார். இதனால், அந்த மூத்த தலைவர் ஏமாற்றம் அடைந்தார்.

இது குறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது: திருமண அழைப்பிதழ் கொடுக்க, முதல்வர் ஸ்டாலினை நேற்று செல்வப்பெருந்தகை சந்தித்தார். அப்போது, கூட்டணி தொடர்பாக முதல்வர் தெரிவித்த கருத்துகளை, காரில் பயணித்தபோது, வேணுகோபாலிடம் செல்வப்பெருந்தகை பகிர்ந்துள்ளார்.

தி.மு.க., - த.வெ.க., தரப்பில் தன்னிடம் தெரிவித்த கருத்துகளை, காங்கிரஸ் தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலிடம் கூறி, அவர்களின் முடிவை அறிய வேணுகோபால் திட்டமிட்டுள்ளார். அவர்களின் ஆலோசனைப்படி, கூட்டணி தொடர்பான முடிவை அறிவிப்பார். அதுவரை யாருடன் கூட்டணி என்ற புதிர் நீடிக்கவே செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement