தி.மு.க., ஆட்சியில் கொசுக்களுக்கு கொண்டாட்டம்: பழனிசாமி தாக்கு
சென்னை: “தி.மு.க., ஆட்சியில் கொசுக்களை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை:
மக்களின் உடல்நிலையை கடுமையாக பாதிக்கும், கொசு, தெரு நாய் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில், தி.மு.க., அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டுகிறது. மழை, குளிர் காலம் முடிந்து, கோடை காலம் ஆரம்பிக்கும் சூழலில், தமிழகம் முழுதும், கொசுக்கள் பெருகி, மக்களை வாட்டி வதைக்கிறது. கொசுத் தொல்லையால், சென்னை மக்களால் வெளியே தலை காட்ட முடியவில்லை.
கொசு உற்பத்தியாகும் மழை நீர் வடிகால்கள், கால்வாய்கள், குப்பை மேடுகளை, சென்னை மாநகராட்சி நிர்வாகம், சரியாக பராமரிக்காததே, இதற்கு காரணம். கொசு மருந்து அடிக்கும் பணியாளர்களை, அந்தப் பணியை செய்யவிடாமல், சுய விளம்பரப் பணிகளுக்கு, தி.மு.க., அரசு பயன்படுத்துகிறது. சுகாதாரத் துறையும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறிப்பாக, நடப்பு நிதி ஆண்டில், கொசு ஒழிப்புக்காக, சென்னை மாநகராட்சி 16.40 கோடி ரூபாய் ஒதுக்கியதாக கூறப்பட்டது. ஆனால், அந்தப் பணம் எங்கே போனது என்று தெரியவில்லை. இதிலும் ஊழல் நடந்திருப்பதால்தான், கொசுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. தி.மு.க., ஆட்சியில், கொசுக்களுக்கு கொண்டாட்டம்தான்.
சென்னையில் கொசுக்கள் ராஜ்ஜியம் நடக்கிறது. கொசுக்களிடம் மாட்டிக் கொண்டு, மக்கள் படாத பாடுபடுகின்றனர். கொசுக்களால், கடந்த ஜனவரியில், 1,500- பேர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். தற்போது, 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு உடனடியாக கொசுக்களை ஒழிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

கொசுக்களுக்கு கருத்தடை செய்தால் போதும். அதற்கு சிங்கப்பூரில் தொழில் நுட்பமே இருக்கிறது. தொடர் மழை மற்றும் சதுப்பு நிலப்பகுதிகள் அதிகம் இருப்பதால் பூமத்தியரேகை பகுதிகளில் கொசுக்கள் ஏராளமாக பெருகும் - ஆனால் இங்கு கொசுக்கள் மிகக்குறைவு. இதையெல்லாம் விட்டுவிட்டு கோடிக்கணக்கில் செலவு செய்து கோமாளித்தனம் செய்வது வெட்டி வேலை.