மோடி வருகை முக்கியத்துவத்தை குறைக்க நாளை தொகுதிகளை அறிவிக்கிறது தி.மு.க.,
- நமது நிருபர் -
பிரதமர் மோடி, நாளை தமிழகம் வர உள்ளார். அதே நாளில், தங்கள் கூட்டணியை இறுதி செய்ய, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, அக்கட்சி மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள்.
கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு, வேல்முருகன் ஆகியோருக்கும், எஸ்.டி.பி.ஐ., மற்றும் ஆதி தமிழர் பேரவைக்கு, தலா ஒரு தொகுதி; காங்கிரசுக்கு 28 தொகுதிகள் என உறுதி செய்யப்பட்டு விட்டது.
74 தொகுதிகள்
கூட்டணிக்குள் புதிதாக சேர்ந்த தே.மு.தி.க.,வுக்கு, எட்டு தொகுதிகள் தர தி.மு.க., தலைமை முடிவெடுத்துள்ளது. ம.தி.மு.க., - வி.சி., - இ.கம்யூ., -மா.கம்யூ., ஆகிய கட்சிகளுக்கு, கடந்த தேர்தலில் கொடுத்தது போல ஆறு தொகுதிகளை கொடுக்க வாய்ப்புள்ளது.
ம.தி.மு.க., தனி சின்னத்தில் போட்டியிட விரும்புவதால், 'சீட்' குறைக்கப்படும். அந்த 'சீட்' வி.சி., மா.கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அளிக்கப்படும்.
தொகுதி பங்கீட்டுக்கு எல்லா கட்சிகளும் சம்மதித்த நிலையில், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கட்சிகளிடம் மட்டும் இன்னும் முடிவு எட்டவில்லை; இன்று முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, 74 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, 160 இடங்களில் தி.மு.க., போட்டியிடும். சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பதால், 172 இடங்களில் தி.மு.க., போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும்.
விருப்பம் இல்லை
கடந்த தேர்தலில், 188 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிட்ட நிலையில், தற்போது அதிக கட்சிகள் இருப்பதால், வேறு வழியில்லை.
இந்த தொகுதி பங்கீட்டில், கூட்டணி கட்சிகளுக்கு முழு விருப்பம் இல்லை. அவர்களை வழிக்கு கொண்டு வர, வரும் உள்ளாட்சி தேர்தலில், 2029 லோக்சபா தேர்தலில், அதிக வாய்ப்பு கொடுப்பதாக தி.மு.க., தலைமை உறுதி அளித்துள்ளது.
திருச்சியில் நாளை, பிரதமர் மோடி பங்கேற்கும் தே.ஜ., கூட்டணி பொதுக்கூட்டம் நடக்கிறது. அதற்கு முக்கியத்துவம் கிடைக்காத வகையில், அதே நாளில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை அடுத்தடுத்து அறிவிக்க தி.மு.க., தலைமை திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்