/ செய்திகள் /  ரூ.5,000 வழங்கியது ஏன்? அமைச்சர் ரகுபதி விளக்கம்

 ரூ.5,000 வழங்கியது ஏன்? அமைச்சர் ரகுபதி விளக்கம்

சென்னை: ''எதிர்க்கட்சிகள் நீதிமன்ற வழக்குகள் வாயிலாக, மகளிர் உரிமைத் தொகையை முடக்க நினைத்த சதியை உணர்ந்து தான், 5,000 ரூபாயை, முதல்வர் ஸ்டாலின் முன்கூட்டியே வழங்கி உள்ளார்,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். சென்னை அறிவாலயத்தில் அவர் அளித்த பேட்டி: பிப்., மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை, 3,000 ரூபாயை மொத்தமாக, 1.31 கோடி பெண்களுக்கு, முதல்வர் வழங்கி, இன்ப அதிர்ச்சி தந்துள்ளார். இந்தத் தொகையை அறிவித்து விட்டு வழங்கினால், எதிர்க்கட்சிகள் உடனே நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு வாங்கி விடுவர். எனவே, பெண்களுக்கு கிடைக்க வேண்டிய பயன், தடையின்றி சேர வேண்டும் என, முதல்வர் இதை வழங்கி உள்ளார். தேர்தல் நேரத்தில் தான் கோடைக்கால நிதி வழங்கப்படுவதாக கூறும் குற்றச்சாட்டு தவறானது. இத்திட்டத்தை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர் சட்டசபை தேர்தலை சாக்காக வைத்து, நீதிமன்ற வழக்குகள் வாயிலாக முடக்க சதி செய்தனர். இதை உணர்ந்து தான், மூன்று மாதங்களுக்கான தொகையை, முதல்வர் முன்கூட்டியே வழங்கியுள்ளார் . இவ்வாறு அவர் கூறினார். ரூபாய் நோட்டுகளுடன் மகளிரணி நடனம் அறிவாலயத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று வந்தபோது, மகளிர் வங்கி கணக்கில், 5,000 ரூபாய் வரவு வைத்ததற்காக, மகளிர் அணியினர் நன்றி தெரிவித்தனர். தங்கள் கையில் 5,000 ரூபாயை பிடித்தபடி, நடனமாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பஸ், ஆட்டோ, இரு சக்கர வாகனத்தில் பயணித்த பெண்கள், சாலையில் நடந்து சென்ற பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !