அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம், அ.தி.மு.க.,வில் இணைவதற்காக பல தரப்பிலும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். ஆனால், அவர் நினைத்தபடி, அவ்வளவு எளிதாக அ.தி.மு.க.,வில் இணைய முடியவில்லை. வாய்ப்பே இல்லை அவர், தனக்கு எதிராக இருக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, 'தினகரனை குறிப்பிடுவது போல அருமை சகோதரர்' என மறைமுகமாக குறிப்பிட்டு, கெஞ்சாத குறையாக அ.தி.மு.க.,வில் இணைய வேண்டுகோள் விடுத்தார். அதன் பின்னரும் அவரை கட்சியில் இணைத்துக்கொள்ள பழனிசாமி விரும்பவில்லை. 'எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் போற்றி பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க., தலைமை கழகத்தை, ஆட்களை வைத்து தாக்கியவர். 'அதனாலேயே, அவரை பொதுக்குழு வாயிலாக கட்சியிலிருந்து நீக்கினோம். பொதுக்குழுவால் நீக்கப்பட்ட பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் வாய்ப்பே இல்லை' என, பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிர்தாட்சண்யமாக நிராகரித்து விட்டார் பழனிசாமி. பொதுக்குழுவை காரணம் காட்டி பன்னீர்செல்வத்துக்கு கதவடைக்கப்பட்டு விட்டாலும், அதன் பின்னணியில் ஒரு கட்டுமான நிறுவன தொழிலதிபரின் கரங்கள் அழுத்தமாக படிந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் ஒவ்வொரு தொண்டனும், கட்சி ஒன்றிணைய வேண்டும் என்றே விரும்புகிறான். ஆனால், கட்சியின் பொதுச்செயலராக இருக்கும் பழனிசாமியும், அவர் கூட இருக்கும் ஒரு சில தலைவர்களும், கட்சி ஒன்றிணைவதில் விருப்பம் இல்லாமல் இருந்தனர். தற்போது, பா.ஜ., அழுத்தத்தால், கூட்டணிக்குள் தினகரனின் அ.ம.மு.க., சேர்த்துக் கொள்ளப்பட்ட பின், அ.தி.மு. தொண்டர் உரிமை மீட்புக் கழகம் நடத்தி வரும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தையும் கட்சிக்குள் இணைக்க வேண்டும். அப்போது தான், தென் மாவட்டங்களில் தி.மு.க., கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு கட்சி பலமடையும் என, கட்சியினரில் பெரும்பாலானோர் கருதுகின்றனர். இதை, கட்சியின் பல மட்டங்களிலும் இருக்கும் நிர்வாகிகள் பலரும், பழனிசாமியிடம் எடுத்து கூறி விட்டனர். ஆனால், பழனிசாமிக்கு பின்புலமாக இருந்து செயல்படும், தமிழகத்தின் பிரபலமான அந்த கட்டுமான நிறுவன தொழில் அதிபர், 'பன்னீர்செல்வத்தை கட்சிக்குள் எக்காரணம் கொண்டும் இணைத்து விடக்கூடாது. 'அப்படி இணைத்தால், அவர் உங்களுக்கு போட்டியாக பொதுச் செயலராகவும், கட்சியை தன் கட்டுக்குள் கொண்டு வரவும் முயற்சிப்பார்' என, பழனிசாமியிடம் துாபம் போட்டுக் கொண்டே இருக்கிறார். அதை அடுத்தே, பன்னீர்செல்வத்துக்கு சாதகமான முடிவை அறிவிக்க பழனிசாமி விரும்பவில்லை. குறிப்பிட்ட அந்த கட்டுமான நிறுவன அதிபரின் செயல்பாடுகளே சந்தேகத்துக்குரியவை. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருந்தபோது, அவரோடு நெருக்கமாக இருந்து சட்டத்துக்கு புறம்பான காரியங்களை செய்தவர்; நிறைய பண பலன்களை பார்த்தவர். உள்சூட்சமங்கள் ஒரு கட்டத்தில், பன்னீர்செல்வத்திடமே பெரும் தொகை பெற்று, அவருக்கே 'அல்வா' கொடுத்தவர். மீண்டும் பன்னீர் அ.தி.மு.க.,வுக்குள் வந்து, பலம் பொருந்தியவராக மாறி விட்டால், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுக்கக்கூடும் என்ற அச்சத்திலும், அவரை கட்சிக்குள் இணைய விடாமல் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு இருக்கிறார். இந்த உள்சூட்சமங்கள் புரியாமல், அவர் சொல்படியெல்லாம் பழனிசாமி செயல்படுவது, கட்சிக்கு நல்லதல்ல. குறிப்பாக, அந்த கட்டுமான நிறுவன தொழிலதிபர் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவர், தி.மு.க., தலைமைக்கு நெருக்கமானவர்களோடும் நெருக்கமான உறவில் இன்றும் இருந்து கொண்டிருப்பவர். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -