பா.ம.க., மாம்பழ சின்னம் வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை: பா.ம.க.,வின் மாம்பழச் சின்னத்தை அன்புமணி தரப்புக்கு ஒதுக்கி, தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியதை எதிர்த்து ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், தேர்தல் கமிஷன் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பா.ம.க., மீதான உரிமை தொடர்பாக, தலைவர் அன்புமணிக்கும், நிறுவனர் ராமதாசுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்நிலையில், மாம்பழச் சின்னத்தை அன்புமணிக்கு ஒதுக்கியுள்ளதாக தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தை ரத்து செய்து தன் முகவரிக்கு கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், 'கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணிக்கு, தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியிருக்கக்கூடாது. சின்னம் ஒதுக்கீடு குறித்து, எனக்கு தான் கடிதம் அனுப்பி இருக்க வேண்டும். 'மாம்பழச் சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல், தேர்தல் கமிஷன் முடக்கும் என, டில்லி உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது; இதுநாள் வரை சின்னத்தை முடக்கவில்லை' என கூறி இருந்தார். இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வில் நேற்று நடைபெற்றது. அப்போது, ராமதாஸ் தரப்பில், 'அன்புமணிக்கு அளிக்கப்பட்ட பா.ம.க., தலைவர் பொறுப்பு, கடந்தாண்டு மே மாதமே முடிந்து விட்டது. தற்போது அவர், பா.ம.க., உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்ட முன்னாள் தலைவர். எனவே, சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக, அன்புமணிக்கு கடிதம் எதையும் அனுப்பக்கூடாது; ராமதாசுக்கு தான், தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்ப உத்தரவிட வேண்டும்' என வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட அன்புமணி தரப்பு, 'இந்த வழக்கில் எங்களை இணைக்கவில்லை. எங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும்' என தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, தேர்தல் கமிஷன் இது குறித்து மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.