/ கிசுகிசு / பறக்கும் படை ரெய்டு; தோட்டங்களில் கூட்டம்

பறக்கும் படை ரெய்டு; தோட்டங்களில் கூட்டம்

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள், பறக்கும் படை திடீர் சோதனைகளால் கருத்தரங்க கூடங்கள், திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினர் கூட்டங்கள் நடத்துவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. இதனால், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் புதிய உத்தியில் இறங்கியுள்ளனர்.பிரதான சாலைகளில் உள்ள இடங்களை விட்டுவிட்டு, உள்ளடங்கிய கிராமங்களில் அமைந்துள்ள தோட்டங்களைத் தேர்வு செய்து வருகின்றனர். அங்கு தான், தொண்டர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான பொருட்களை தந்து அனுப்ப வசதியாகவும், அவர்கள் எளிதாக பிரிந்து செல்லும் வகையிலும் இருக்கும் என்கின்றனர்.இந்த தோட்டங்களில் கூட, முந்தைய தேர்தல்களில் எந்தத் தோட்டத்தில் கூட்டம் போட்டு வெற்றி கிடைத்ததோ அந்த தோட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர்.

செந்துாருக்கு த.வெ.க., குறி

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்ற திருச்செந்துார் தொகுதியில், தற்போது ஏழாவது முறையாக போட்டியிட உள்ளார். இங்கு, த.வெ.க.,வின் மாநில துணை பொதுச்செயலர் சுபத்ராவின் கணவரான முருகன் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறார்.அமைச்சருக்கு இணையாக முருகனும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தொகுதி மக்களுக்கு பல இடங்களில் குக்கர் வழங்கினார்.உடன்குடி பகுதியில் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 5,000 எவர்சில்வர் தட்டுகளை தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், திருச்செந்துார் அருகே அமலிநகரில் ஒரு வீட்டில், 20 பேருடன் முருகன் ஆலோசனை நடத்தி உள்ளார்.எந்தவித அனுமதியும் பெறாமல் ஆலோசனை நடத்தியதாக தாசில்தார் தங்கமாரி என்பவர் திருச்செந்துார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !