தொகுதி பங்கீட்டு பேச்சை துவக்காதது ஏன்: அ.தி.மு.க., தரப்பு விளக்கம்
சென்னை: தி.மு.க., கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சு துவங்கி, தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் அந்த பணி துவங்கப்படவில்லை.
இதற்கு, தங்கள் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரலாம் என்று அ.தி.மு.க., காத்திருப்பதே காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, தி.மு.க., கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர், த.வெ.க., என, நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது.
தி.மு.க., கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் தொகுதி பங்கீட்டு பேச்சு துவக்கப்பட்டு விட்டது; காங்கிரசுடன் மட்டும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல், அ.தி.மு.க.,விடம் வழங்கப்பட்டு விட்டது; ஆனால், அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு பேச்சு இன்னும் துவக்கப்படவில்லை.
இதற்கான காரணம் குறித்து, அ.தி.மு.க., தரப்பில் கூறப்படுவதாவது:
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் கூட்டணி அறிவிப்பை வெளியிடாமல் உள்ளனர். அவர்களையும் கூட்டணியில் சேர்க்க பேச்சு நடக்கிறது.
தேர்தல் தேதி அறிவித்து, வேட்பு மனு தாக்கல் வரை, கட்சிகளின் நிலைப்பாடு மாற வாய்ப்புள்ளது.
அப்போது, தி.மு.க., அணியில் உள்ள கட்சிகள் வெளியேறக் கூடும். த.வெ.க.,வின் நிலைப்பாடு கூட மாறலாம்.
அதனால், தேர்தல் தேதி அறிவிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன் பின்னர், தொகுதி பங்கீட்டை ஓரிரு தினங்களில் முடித்து விடலாம்.
இவ்வாறு அ.தி.மு.க., தரப்பில் கூறப்படுகிறது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்