கள நிலவரத்தை அறிய விரும்பாத மேலிட தலைவர்கள்; பா.ஜ.,வினர் அதிருப்தி
சென்னை: தமிழகம் வரும் பா.ஜ., மேலிட தலைவர்களும், மத்திய அமைச்சர்களும், மாநில நிர்வாகிகளுடன் மட்டும் ஆலோசனை நடத்தி விட்டு போவதால், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில், தே.ஜ., கூட்டணிக்கு அ.தி.மு.க., தலைமை வகித்தாலும், கூட்டணியில் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்தது பா.ஜ., தான். எனவே, இந்த தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
அதற்கு ஏற்ப, முழுவீச்சில் களப்பணியில் ஈடுபடுமாறு தொண்டர்களையும், நிர்வாகிகளையும், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும் மத்திய அமைச்சர்கள் மற்றும் மேலிட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் மட்டும் ஆலோசனை நடத்தி செல்கின்றனர்.
அவர்கள் வரும் விபரமே, கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு தெரிவதில்லை. மாவட்ட, மண்டல, 'பூத்' கமிட்டி நிர்வாகிகளுக்கு தான் மக்களின் மனநிலை, தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகள் உள்ளிட்டவை நன்கு தெரியும்.
எனவே, டில்லியில் இருந்து வரும் தலைவர்கள், எங்கு சென்றாலும், அங்கு காலையில் ஒரு மாவட்டம், மாலையில் ஒரு மாவட்டம் என சென்று, மண்டல தலைவர்கள், 'பூத்' கமிட்டி நிர்வாகிகள், தொண்டர்களை அழைத்து, தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிய வேண்டும்.
இது தவிர, இரவில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். அப்போது தான் உண்மையான கள நிலவரத்தை அவர்களால் அறிய முடியும். மேலும், மாவட்டங்களுக்கு சென்று, உள்ளூர் நிர்வாகிகளை சந்தித்தால் தான், அவர்களுக்கு அந்த பகுதி மக்கள் மத்தியில் மதிப்பு கூடும். அவர்களும், உற்சாகமாக தேர்தல் பணியில் ஈடுபடுவர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
Advertisement
கள நிலவரம் அறிந்தால் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் அதனாலதான் அதை பற்றி தெரிஞ்சிக்க விரும்பாம இருக்காங்க

இனியாவது கீழ்மட்ட தலைவர்களை சந்தித்தால் பாஜக விற்கு தமிழகத்தில் வேறுன்ற வாய்ப்பு உள்ளது.இதை உணர்ந்தால் சரி.