அன்று ஆதரவு; இன்று எதிர்ப்பு: விஜய் பேச்சால் குழப்பத்தில் த.வெ.க.,
- நமது நிருபர் -
கருணாநிதிக்கு சிலை, 'நீட்' தேர்வு விலக்கு போன்ற விவகாரத்தில், அன்று ஆதரவு தெரிவித்த விஜய், இப்போது எதிர்ப்பதால், த.வெ.க.,வினர் குழப்பமாகி உள்ளனர்.
த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: த.வெ.க.,வில், விஜய் பேச்சுக்கு மட்டும்தான் மக்களிடம் வரவேற்பு கிடைக்கிறது. முன்பு, அவர் ஒரு நாள் பேசினால், தமிழக அரசியலில், ஒரு வாரத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆனால், சமீபகாலமாக விஜயின் பேச்சு முரண்பாடாக இருப்பதால், தாக்கமும் குறைந்து வருகிறது. சமூக வலைதளங்களில் அதிகப்படியாக விமர்சனத்திற்கும் உள்ளாகிறது.
தஞ்சாவூரில் நடந்த த.வெ.க., கூட்டத்தில் தி.மு.க., குறித்து பேசுகையில், 'உங்க அப்பாவுக்கு வெண்கல சிலை வைக்க முயற்சி செய்தபோது, மக்களின் பணத்தில் யாருக்குப் புகழ் பாடப் பாக்குறீங்க என்று உச்ச நீதிமன்றம் கேட்டது' என விஜய் குறிப்பிட்டார்.
ஆனால், 2010ல், 'பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற பெயரில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய், 'சென்னை கலைஞர் நகரில் உங்களுக்கு சிலை வைக்க வேண்டும். அந்த சிலையை உங்களுடன் சேர்ந்து நானும் ரசிக்க வேண்டும்' என பேசி இருந்தார்.
அதேபோல், 2024ல் த.வெ.க., சார்பில் மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியில், 'தமிழக அரசின் 'நீட்' விலக்கு தீர்மானத்துக்கு முழு மனதுடன் ஆதரவு அளிக்கிறேன்' என்றார் விஜய்.
ஆனால், தஞ்சாவூர் கூட்டத்தில், 'மாநில அரசால் முடியாது என தெரிந்தும், நீட்டை ஒழிப்போம் என மோசடி செய்கின்றனர்' என்று மாற்றி பேசுகிறார்.
கருணாநிதி சிலை குறித்தும், நீட் தேர்வு குறித்தும் விஜய் பேசிய பேச்சுகளை, தி.மு.க.,வினர் சமூக வலைதளங்களில் பரப்பி கேலி செய்கின்றனர்.
தி.மு.க., விஷயத்தில் எப்படி மாற்றி பேசுகிறாரோ, அதேபோல்தான் பா.ஜ., விஷயத்திலும் நடந்து கொள்கிறார். கட்சி துவங்கியதும் பா.ஜ.,வை கொள்கை எதிரி என்றவர், தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
பா.ஜ., எதிர்ப்பில் தீவிரமாக இருந்ததால்தான், தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் த.வெ.க.,வுடன் பேசின. ஆனால், சி.பி.ஐ., வழக்கு விசாரணைக்கு டில்லிக்கு சென்று வந்த பின், பா.ஜ., குறித்து விஜய் பேசுவதில்லை.
அதற்கு அவர், 'தமிழகத்தில் பா.ஜ., இல்லை; அவர்கள் குறித்து பேச வேண்டியதில்லை' என விளக்கமும் கொடுக்கிறார். இல்லாத கட்சியை, கொள்கை எதிரி என ஏன் பிரகடனப்படுத்த வேண்டும்?
இப்படி முன்பு ஒன்று பேசி, தற்போது அதற்கு நேர்மாறாக விஜய் பேசுவதால், த.வெ.க.,வினர் கடும் குழப்பத்தில் உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
Advertisement
விசிலடிச்சான் குஞ்சுகள் தம் கட்சிக்கு ஒட்டு போடுவார்கள் என விஜய் இன்னமும் நம்புகிறார். வெயிலுக்கு குடை இலவசமா கொடுத்தால் டெபாசிட் தேறும் ?
எனக்குப் பிறகு எந்த சூழ்நிலையிலும் எனது வாரிசுகள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என ஸ்டாலின் பேசியதையும் எந்தக் காலத்திலும் நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என உதயநிதி பேசியதையுமே மக்கள் மறந்து விட்டார்கள். விஜயை ஒரு நடிகராக அன்றைக்கு மேடையில் கலைஞரை புகழ்ந்து பேசச் சொல்லி இருக்கிறார்கள் பேசி இருக்கிறார் அவ்வளவுதான்!
விஜய் நடத்தும் பேரணிகளிலும் கூட்டங்களிலும் மக்கள் அதிக அளவில் கூடினாலும், கட்சியை சரிவர நடத்தவோ ஆலோசணை கூறவோ யாருமில்லாத நிலையில் இன்னமும் விஜய் ஒரு தனி மரம் தான் .எம்.ஜி.ஆரோடு இருந்து இப்போது விஜய் கட்சியில் சேர்ந்த ஒரே ஒரு அரசியல்வாதியான செங்கோட்டையன் கூட தனது எதிர்காலம் வீணாகி விட்டது என எண்ணி வருந்துவதாக அறிகிறோம். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எழுபத்தைந்து சதவிகிதம் தி.மு.க. அரசின் இலவசம் மற்றும் சலுகைகளை பெறும் பயனாளிகளக இருப்பவர்கள் தான். இதன் ருசியை இலவசமாக அனுபவித்து வரும் இவர்களின் மனம் மாறி விடும் என விஜய்யை போல் யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். மேலும் எம்.ஜி.ஆர் போல் எந்த ஒரு புரட்சியையும் விஜய்யால் செய்ய முடியாது. எம்.ஜி.ஆர் தாய் கழகத்தில் இருக்கும் போதே அந்த கட்சிக்குள்ளேயே மூத்த தலைவர்களையும் சேர்த்து ஒரு சராசரியான எண்ணிக்கையில் ஆதரவாளர்களை தனது நம்பிக்கைக்கு உரியவர்களாக மாற்றி தன் தலைமையில் ஒரு தனி கட்சிக்கு தேவையான அனைத்தையும் தாய் கழகத்தில் இருந்து கொண்டே செய்த பின்- அதில் வெற்றி அடைய கூடிய நிலை உருவான பிறகே கட்சியை உடைக்கவும் அ.தி.மு.க.வை உருவாக்கவும் அவரால் முடிந்தது. அவர்கள் அனைவரும் கூடவே இருந்ததாலும் மக்களில் பலர் அவரது ரசிகர்களாக இருந்ததாலும் அ.தி.மு.க. ஆரம்பித்த போதே அது வெற்றி பெறும் கட்சியாக தான் தோன்றியது. இந்த எம்.ஜி.ஆரின் அசூர பலம் விஜய்க்கு கண்டிப்பாக வர போவதில்லை.
இதில் குழப்பம் ஒன்றும் இல்லை. அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி வரலாம். அல்லது தேர்தலுக்குப் பின் ஆதரவு வரலாம்.

முதலில் அவர் ஒரு அரசியல்வாதியே இல்லை,மேடையில் இன்னமும் சினிமா நடிப்பையே தொடர்ந்து கொண்டிருக்கிறார் ,அரசியல் நடிப்பு என்பது வேறு ,அதில் தேர்ச்சி பெற்ற நடிகர் ஒருவர் இப்போதான் எம்பி யாகி உள்ளார்,அவரிடம் போய் டியூஷன் படித்தால் தேரலாம் இல்லை என்றால் I am back னு சினிமாவுக்கே போகவேண்டியதுதான்