வாக்காளர்கள் அமர பெஞ்ச், மொபைல் போன் வைக்க அறை; ஓட்டுச்சாவடிகளில் வருகிறது சிறப்பு வசதி
சென்னை: ஓட்டளிக்க வரும் வாக்காளர்கள் அமர பெஞ்ச் போடவும், மொபைல் போன்கள் வைக்க தனி அறை ஏற்படுத்தவும், தேர்தல் கமிஷன் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை:
* ஓட்டுச் சாவடிகளில் குடிநீர் வசதி, காத்திருப்பு பகுதி, கழிப்பறை, போதிய வெளிச்சம், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சாய்வு தளம், தரமான ஓட்டுப்பதிவு அறை, முறையான வழிகாட்டி பலகைககள் ஏற்படுத்தப்படும்.
* வாக்காளர்கள் ஓட்டுப்போட காத்திருக்கும் போது, அமருவதற்கு ஏதுவாக, வரிசையில் குறிப்பிட்ட இடைவெளிகளில், 'பெஞ்ச்' போடப்படும்.
* வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சுவரொட்டிகள் வைக்கப்படும். அதில், ஓட்டுச்சாவடி விபரங்கள், வேட்பாளர் பட்டியல், வாக்காளர் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் குறித்த விபரங்கள், ஓட்டுப்பதிவு நடைமுறை போன்றவை இடம் பெற்றிருக்கும்.
* வாக்காளர்கள் தங்கள் ஓட்டுச்சாவடி எண் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண்ணை கண்டறிய உதவுதவதற்காக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடி அமைவிடத்திலும், வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்படும். வாக்காளர்களுக்கு எளிதில் தெரியும் வகையில், இந்த உதவி மையங்கள் குறித்து வழிகாட்டி பலகைகள் அமைக்கப்படும்.
* வாக்காளர்கள் வசதிக்காக, தேர்தல் கமிஷன் எடுத்துள்ள பல முயற்சிகளில் ஒன்றாக, ஓட்டுச்சாவடி நுழைவாயிலுக்கு வெளியே, வாக்காளர்களுக்கான மொபைல் போன் வைப்பு அறை வசதி ஏற்படுத்தப்படும். ஓட்டுச்சாவடிக்குள் நுழைவதற்கு முன், தங்களது மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்ட நிலையில், அங்கு நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்