இரு கூட்டணிகளில் தே.மு.தி.க., பேச்சு; தவறான தகவல் என்கிறார் பிரேமலதா
சென்னை: ''இரண்டு கூட்டணியிலும் தே.மு.தி.க., பேசுவதாகக் கூறுவது தவறான தகவல்,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
தே.மு.தி.க., கொடி நாளையொட்டி, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று கொடியேற்றிய பின், பிரேமலதா அளித்த பேட்டி:
தே.மு.தி.க.,வினர் திரளாக விருப்ப மனு கொடுக்கின்றனர். வரும் தேர்தலில், தே.மு.தி.க., அங்கம் வகிக்கும் கூட்டணி, மகத்தான வெற்றி கூட்டணியாக இருக்கும். நாங்கள் இரண்டு கூட்டணியிலும் பேச்சு நடத்துவதாகக் கூறுவது தவறான தகவல். எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை தே.மு.தி.க., அமைக்கும். கூட்டணியை உரிய நேரத்தில், கட்சியினருடன் கலந்து பேசி அறிவிப்போம்.
பத்திரிகையாளர்கள் கூலாக இருங்கள். கூட்டணி தாமதம் என்பது உங்கள் கற்பனை. கட்சி தலைமை வெளியிடும் அறிவிப்பே உண்மையானது. கற்பனையான செய்திகளுக்கு பதில் கூற முடியாது.
தே.மு.தி.க., எப்படிப்பட்ட கட்சி என்பது மக்களுக்கு தெரியும். யார் கருத்தும் எங்களை பாதிக்காது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது. ஆனால், ஆட்சியில் பங்கு என்பதற்கு, மக்கள் தீர்ப்பு பதில் தரும். யார் எந்த தொகுதியில் போட்டி என்பது யாருக்கும் தெரியாது.
கூட்டணி முடிவாக வேண்டும்; பின், தொகுதி முடிவாக வேண்டும்; அதன்பிறகே, வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். இவ்வாறு கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள் (0)