தி.மு.க.,-காங்., கூட்டணி அமையுமா? இன்று தெரியும்!
தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து, காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களிடம், அக்கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபால் தனித்தனியாக கருத்து கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் தொகுதி எண்ணிக்கை தொடர்பான முடிவை வெளியிட, தி.மு.க.,வுக்கு இன்று இரவு வரை காங்கிரஸ் தலைமை கெடு விதித்துள்ளது. தி.மு.க., குழுவினரிடம், காங்கிரஸ் குழுவினர் நடத்திய சமீபத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால், தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
காங்கிரஸ் தரப்பில் கேட்கப்படும் 41 தொகுதிகளுக்கு பதிலாக, 25 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என தி.மு.க., தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து, காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.
தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களிடம் கூட்டணி பற்றி கருத்து கேட்டு, தன்னிடம் கூறுமாறு, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபாலுக்கு, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களிடம், வேணுகோபால் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்; ஒவ்வொருவரிடம் கூட்டணி குறித்து கருத்து கேட்டுள்ளார். அவற்றை தொகுத்து, ராகுலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஒன்பது பேரில், நான்கு பேர் மட்டும், தி.மு.க., கூட்டணியில் நீடிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். மீதமுள்ள ஐந்து பேர், த.வெ.க., கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்தனர்.
கூட்டணி நீடிக்க விருப்பம்
மொத்தமுள்ள 17 எம்.எல்.ஏ.,க்களில், ஆறு பேர் மட்டும் தி.மு.க.,வுடன் கூட்டணி நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 11 பேரும், டில்லி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறியிருக்கின்றனர்.
இது குறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது: ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா சீட், உள்ளாட்சிகளில் ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை, தி.மு.க.,விடம் முன்வைத்துள்ளோம். 'ஆட்சியில் பங்கு தர மாட்டோம்; 25 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் தருகிறோம்' என சொல்கின்றனர்.
உள்ளாட்சி பதவிகளில் ஒதுக்கீடு குறித்து, சட்டசபை தேர்தலுக்கு பின் முடிவு செய்வோம் என தி.மு.க., குழு தெரிவித்து விட்டது. எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என்பதால், முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் வாழ்த்து கூறுவதை, ராகுல் தவிர்த்தார். அவரை வலுக்கட்டாயமாக வாழ்த்து சொல்ல வைக்க, தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவர் முயற்சித்தார்.
அதன்படி, காங்கிரஸ் தலைவர் கார்கே பேசிய பின், நேற்று முன்தினம் மதியம் 1:30 மணிக்கு ராகுல் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் ராகுலுக்கு நன்றி தெரிவித்து, ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'சகோதரர் ராகுல்' என குறிப்பிடுவதை தவிர்த்து விட்டார்.
இதையடுத்து, 'இன்ஸ்டாகிராம், எக்ஸ்' வலைதளங்களில் முதல்வர் ஸ்டாலினை பின்தொடர்வதை, நேற்று ராகுல் நிறுத்தி விட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாட்கள் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. அதில் ராகுலும், வேணுகோபாலும் பங்கேற்றனர்.
இன்று இரவுக்குள் கெடு
சென்னையில் இருந்து சென்ற த.வெ.க., நிர்வாகி ஒருவர், அங்கு ராகுலையும், வேணுகோபாலையும் சந்தித்து பேசியுள்ளார். த.வெ.க., கூட்டணியில் காங்கிரசுக்கு 78 தொகுதிகள், 10 அமைச்சர், ஒரு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து பேசியிருக்கிறார்.
கேரளம், புதுச்சேரி தேர்தலில் காங்கிரசுக்கு த.வெ.க., முழு ஆதரவு அளிக்கும் என்றும், அம்மாநிலங்களில் காங்கிரசுக்கு ஆதரவாக விஜய் தீவிர பிரசாரம் செய்யவும் தயார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தி.மு.க., தன் முடிவை இன்று இரவுக்குள் அறிவிக்க வேண்டும் என, காங்கிரஸ் கெடு விதித்துள்ளது. இன்று இரவுக்குள் தொகுதி பங்கீடு தொடர்பான தன் முடிவை தி.மு.க., வெளியிடவில்லை என்றால், த.வெ.க., - காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
- நமது நிருபர் -
Advertisement
இன்று சந்திர கிரகணம். சூரியனின் ஒளி சந்திரனிற்கு போய் சேராத வண்ணம், பூமி குறுக்கே செல்லும்.
எனக்கு என்னமோ காங்கிரஸ் உஷார் ஆகி விட்டது என்று நினைக்கிறேன் அவர்கள் திமுக உடன் வைத்திருக்கும் உறவால் வட மாநிலங்களில் பெருத்த அடி வாங்குகிறோம் என்று இப்பொழுதுதான் உணரத் தொடங்கியுள்ளார்கள் திமுகவின் இந்து இந்தி மற்றும் கடவுள் எதிர்ப்பு வட மாநிலங்களில் பலத்த அடியை கொடுத்துள்ளது காங்கிரஸுக்கு அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள் இவர்களை வைத்து இருந்தால் நாம் இந்தியாவில் இனி வளர முடியாது என்பதால் இவர்களை கை கழுவ முடிவு செய்துவிட்டார்கள் எது இருந்தாலும் ஒரு நாட்டிற்கு எதிர்க்கட்சி கண்டிப்பாக தேவை அதற்கு காங்கிரஸ் வளர வேண்டும் என்பது எனது எண்ணம்
போங்கப்பா , ஓரமா போயி விளையாடுங்கப்பா . . . ஜனங்களுக்கு நிறையா வேலை இருக்கு , , டிஸ்டர்ப் பண்ணாதீங்கப்பா . .
மேலிடத்திற்கு காங்கிரஸ் திமுகவை விட்டு வெளியேறினால் ஒன்றும் தேறாது மற்றும் தேவையும் இல்லை என தெரியும், ஆனால் கேரளாவில் கட்டாயம் இந்த முறை வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது, எனவே விஜய் ரசிகர்களின் ஒட்டு கேரளாவில் தேவை.
ஸ்டாலின் காங்கிரஸ் அவர்களாகவே வெளியே செல்லட்டும் என்று நினைக்கிறார் . அதனால் இப்போதே கிளம்பலாம் .இரவு வரை எதற்கு
இங்கே வந்துள்ள கருத்துக்களை பார்த்தால் காங்கிரஸ் தமிழ் நாட்டில் இருந்து அழியவேண்டும் என்ற நல்லஎண்ணத்தில் வந்த பிஜேபி காரர்களின் கருத்தாக தெரிகிறது
காங்கிரஸ் தேவை இல்லை கிளம்பு கிளம்பு கிளம்பு . விஜய் 75 தொகுதி கொடுத்தாலும் ஒன்றில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாது . இது கட்சி தலைவர்களுக்கு தெரியும் அதனால் யாரும் போட்டி இட துணிய மாட்டார்கள்.. வேட்பாளர்களை தேடித்தான் நிறுத்த வேண்டும். அல்லது ராகுல் மற்றும் கிரிஸ் ஷோடங்கர் தான் நிற்கவேண்டும். கட்சி 2 ஆக உடையும் . 1996 போல காங்கிரஸ் பூஜ்யம் ஆகும் . 0 + 0= 0.
முடிவில் பலத்த காயங்களுடன் தலையில் கட்டுடன் படுக்கப்போவது செல்லாபெரும்தொகைதான்

விடியல் சார் காங்கிரஸ் இல்லைனா 20 தொகுதில டெபாசிட் காலி ஆகும்