விஜய்யின் சைக்கிள், அஜித்தின் மாஸ்க் நிறங்கள்; குறியீட்டு அரசியலால் யாருக்கு லாபம்?

சென்னை: காலாகாலமாக குறியீடுகள் மூலம் தங்கள் கருத்துக்களை உணர்த்த உலக அளவில் அரசியல் தலைவர்கள் பலர் முயற்சி மேற்கொள்வர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதல், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன்வரை பலர் தங்கள் உடைகள், வாகனங்கள், அணியும் ஆபரணங்கள் உள்ளிட்டவற்றில் குறியீட்டு அரசியல் செய்வது வழக்கம்.

குறியீட்டு அரசியலுக்கு மிகவும் பிரபலமானவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தான் அணியும் வித்தியாசமான சாக்ஸ் மூலமாக அவ்வப்போது அரசியலை வெளிப்படுத்துவார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்திருந்தார். அப்போது கனடாவில் நிலவிவரும் காலிஸ்தான் விவகாரத்தை விளக்கும் ஓவியம் கொண்ட சாக்ஸ் அணிந்திருந்தார் ஜஸ்டின் ட்ரூடோ. இதேபோல தனது வித்தியாசமான சாக்ஸ் மூலமாக உலக அரசியல் குறியீடுகளை அவர் வெளிப்படுத்துவது வாடிக்கை.
தற்போது தமிழ் சினிமா நடிகர்களும் இந்த குறியீட்டு அரசியல் கோதாவில் இறங்கி விட்டனரோ என்ற சந்தேகம் எழுகிறது. இன்று காலை மனைவி ஷாலினியுடன் வாக்குப்பதிவு செய்ய நடிகர் அஜித் வந்திருந்தபோது அவர் அணிந்திருந்த மாஸ்க் தற்போது பேசுபொருளாக உள்ளது. கருப்பும் சிவப்பும் கலந்த அவர் மாஸ்க் அணிந்து இருந்தார். இதனால் திமுகவுக்கு அவர் ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் வாக்கு செலுத்த நடிகர் விஜய் தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு சென்றது காலை முதலே வைரலாகி வருகிறது. இவரது சைக்கிளில் கருப்பும் சிவப்பும் கலந்த நிறம் இருந்தது. இதன் காரணமாக விஜயம் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.

இதுபோன்ற குறியீடுகளை இந்த நடிகர்கள் நிஜமாகவே வைத்து இருந்தார்களா அல்லது தற்செயலாக இவை அமைந்ததா என யாருக்கும் தெரியாது. ஆனால் தற்போது சமூக வலைதளத்தில் பொதுவாகவே ஒரு பாணி கையாளப்படுகிறது. குறிப்பிட்ட பிரபலங்கள் அணியும் டீ சர்ட் முதல் ஷூ வரை அனைத்திலும் குறியீடு கண்டுபிடிப்பது நெட்டிசன்களின் அன்றாட பணிகளில் ஒன்றாகிவிட்டது.

ஆனால் இதில் பரிதாபமான உண்மை என்னவென்றால் பெரும்பாலான பிரபலங்கள் இயல்பாக ஆடைகளை அணிந்து வெளியே செல்கின்றனர். தற்செயலாக இது ஒரு கட்சியின் கொடி நிறத்தில் இருந்தால், உடனே அந்த குறிப்பிட்ட பிரபலம் அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. இதனால் யாருக்கு என்ன லாபம் என்று சிந்தித்துப் பார்த்தால் ஒருவருக்கும் ஒரு லாபமும் இல்லை என்பது தெளிவாகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)