ஐதராபாத் : லோக்சபா தேர்தலில் அதிகபட்சமாக 185 வேட்பாளர்கள் போட்டியிடும் தெலுங்கானாவின் நிஜாமாபாத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்த 35 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துஉள்ளது.
லோக்சபா தேர்தல் இம்மாதம் 11ல் துவங்கி மே 19 வரை ஏழுகட்டங்களாக நடக்கிறது.இவற்றில் பதிவான ஓட்டுக்கள் மே 23ல் எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்திற்கான தேர்தல் முதல் கட்டமாக வரும் 11ல் நடக்க உள்ளது. இங்குள்ள நிஜாமாபாத் தொகுதியில் மட்டும் 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாட்டில் அதிகஎண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக நிஜாமாபாத் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது.
இங்கு அந்த கட்சி சார்பில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா போட்டியிடுகிறார். ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசின் மீதுள்ள அதிருப்தி காரணமாக 170 விவசாயிகள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் தேர்தல் நடத்துவதற்கான செலவும் அதிகரித்து உள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ரஜத் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிஜாமாபாத் லோக்சபா தொகுதி ஏழு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. ஒரு சட்டசபை தொகுதிக்கு 3 கோடி ரூபாய் என இத்தொகுதியில் தேர்தல் நடத்த மொத்தம் 21 கோடி ரூபாய் செலவாகும்.ஆனால் இங்கு வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கூடுதலாக 14 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.வேட்பாளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் ஓட்டுச் சீட்டு முறையை பயன்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் கூடுதலாக ஓட்டு இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனால் ஓட்டுப்பதிவு மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகிறது. ஒரு தொகுதிக்கு இவ்வளவு அதிகமான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது உலகிலேயே இது தான் முதல் முறை. ஓட்டுப் பதிவின் போது மின்னணு இயந்திரங்களை எடுத்து வரவும், எடுத்துச் செல்லவும் அவசர உதவிக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிக ஊழியர்கள் தேவைப்படுவதால் அவர்களின் பயணம் மற்றும்அகவிலைப்படிக்கு பெரும் தொகை தேவைப்படுகிறது. இவை அனைத்தையும் கணக்கிடும் போது இத்தொகுதியில் தேர்தல் நடத்த 35 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து