/ செய்திகள் / நிர்வாக முடிவுகள் எடுக்கும் நிலையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இல்லை: கோர்ட்டில் அன்புமணி தகவல்

நிர்வாக முடிவுகள் எடுக்கும் நிலையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இல்லை: கோர்ட்டில் அன்புமணி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'வயது மூப்பு மற்றும் மருத்துவ காரணங்களால், நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்கும் நிலையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இல்லை' என, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணி இடையே மோதல் நீடிக்கும் நிலையில், கட்சியின் சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த, அன்புமணிக்கு தடை விதிக்க கோரி, ராமதாஸ் சார்பில், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி தர்மபிரபு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும்' என, அன்புமணி தரப்பில் வழக்கறிஞர் பாலு மனு தாக்கல் செய்தார்.மனு விபரம்: ராமதாசுக்கு, தற்போது 87 வயதான நிலையில், வயது மூப்பு மற்றும் மருத்துவ காரணங்களால், நிர்வாக ரீதியாக முடிவுகளை எடுக்கும் நிலையில், அவர் இல்லை. இதை பயன்படுத்தி, ராமதாசை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர். சிலரின் துாண்டுதால், தன்னை தானே தலைவர் என, ராமதாஸ் அறிவித்தது, பா.ம.க., சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல. கட்சி நிறுவனர் என்ற அடிப்படையில், பா.ம.க.,வில் ஆலோசனை, வழிகாட்டுதல் மட்டுமே அவர் மேற்கொள்ள முடியும். பொதுக்குழுவுக்கு தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது; முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைவர், பொதுச்செயலருக்கு மட்டுமே உள்ளது. அதனால் தான், சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக, அன்புமணிக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியது. எனவே, கட்சி கொடி, சின்னம் மற்றும் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த தடை கோரி, ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. கட்சி உரிமை கோரி வழக்கு தொடர ராமதாசுக்கு உரிமை இல்லை. அன்புமணியின் பதவி காலம், ஆக.,1ம் தேதி வரை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அன்புமணி தாக்கல் செய்த இந்த மனுவுக்கு, வரும் 11ம் தேதிக்குள் ராமதாஸ் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !