ஆண்ட கட்சிக்கே 2 'சீட்' தான்: அதிருப்தியில் தொண்டர்கள்
புதுச்சேரியில், என்.ஆர்.காங்., - பா.ஜ., அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க., வுக்கு இரண்டு 'சீட்' ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், ஆட்சியை பிடிக்கும் முன்பே, புதுச்சேரியில் ஆட்சியை பிடித்த கட்சி அ.தி.மு.க., கடந்த, 1974ல் அக்கட்சியின் ராமசாமி, முதல்வராக இருந்தார். பின், 1977லும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது.
எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் செல்வாக்கால், ஓட்டு வங்கி அதிகரித்து, கூட்டணி அரசிலும் அ.தி.மு.க., அங்கம் வகித்தது. கடந்த 2011 தேர்தலில் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. பின், 2016 தேர்தலில், 30 தொகுதிகளிலும் தனித்து போட்டி யிட்டு நான்கு தொகுதிகளில் வென்றது.
ஜெயலலிதா மறைந்த பின், கடந்த 2021 தேர்தலில், தே.ஜ., கூட்டணியில், ஐந்து தொகுதிகள் ஒதுக்கி, ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இந்த தேர்தலில், இரண்டு சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சமீபத்தில் துவக்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சிக்கும் இரண்டு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
அப்படி என்றால், ல.ஜ.க.,வை விட அ.தி.மு.க., சின்ன கட்சியா என, புதுச்சேரி அ.தி.மு.க.,வினர் கொந்தளிக்கின்றனர். புதுச்சேரியை ஆட்சி செய்த அ.தி.மு.க., இரண்டு 'சீட்'டுக்குள் அடங்கி கிடப்பதற்கு, கட்சி தலைமையே காரணம் எனவும் விமர்சிக்கின்றனர்.
தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும், அந்த கட்சிக்கு 20 சீட் என்றால், அ.தி.மு.க.,வுக்கு 10 சீட் என்ற பார்முலாவை எம்.ஜி.ஆர்., கடைப்பிடித்தார். 2011 தேர்தலில் கூட, என்.ஆர்.காங்.,குடன் கூட்டணி அமைத்தபோது, 10 சீட்டுகளை ஜெயலலிதா பெற்றார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, புதுச்சேரியை கண்டுகொள்ளாததால், இரண்டு சீட்டுக்கு அடிபணியும் நிலை வந்துவிட்டதாகவும், இப்படியே போனால் அ.தி.மு.க.,வை புதுச்சேரியில் யாராலும் காப்பாற்ற முடியாது எனவும் கட்சியினர் புலம்புகின்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்