Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 தமிழக சட்டசபை தேர்தல் வித்தியாசமாக இருக்கும்; தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் சூசகம்

 தமிழக சட்டசபை தேர்தல் வித்தியாசமாக இருக்கும்; தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் சூசகம்

சென்னை: ''தமிழக சட்டசபை தேர்தல் வித்தியாசமாக இருக்கும்; அதை நீங்கள் பார்ப்பீர்கள்,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன், சென்னையில் கடந்த இரண்டு நாளாக ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து, அவர் அளித்த பேட்டி:

இந்தியா, உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு. தேர்தல் தொடர்பாக சமீபத்தில், 72 நாடுகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், 10ம் நுாற்றாண்டில், தமிழகத்தில் இருந்த குடஓலை தேர்தல் முறை குறித்து பெருமையாக பேசினோம். ஜனநாயகத்தை காப்பதில், தமிழகம் முன்னோடியாக இருந்துள்ளது. ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இருப்பது, தமிழகத்துக்கு பெருமை.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானாலும், தகுதியுள்ள நபர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, வாக்காளர் ஆகலாம். எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் குறித்து வெறும், 267 புகார்கள் மட்டுமே வந்துள்ளன. அவற்றில் பல தீர்க்கப்பட்டு விட்டன. அதன்படி, எஸ்.ஐ.ஆர்., பணிகள் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளன.
மேலும், 18 முதல் 19 வயது வரை, 12.51 லட்சம் இளைஞர்களும், 20 முதல் 29 வயது வரை, 1.05 கோடி இளைஞர்களும் வாக்காளர்களாக உள்ளனர். இந்த தேர்தலில், அவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.
அதிகபட்சம், 756 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைத்துள்ளோம். முதல்முறையாக, 'விவிபேடில்' வேட்பாளரின் கலர் போட்டோ இடம்பெற உள்ளது. ஓட்டுப்பதிவு அன்று, இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான ஓட்டுகளின் சதவீதம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதேபோல, ஓட்டு எண்ணிக்கையின்போது, கடைசி இரண்டு சுற்றுகள் மீதமிருக்கும் போதே, தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும்.
வாக்காளர் அட்டைகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஏனென்றால், ஆதார் அட்டையை குடியுரிமைக்கான ஆவணமாக கருத முடியாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பலவும், ஒரே கட்டத்தில் தேர்தலை நடத்த கோரிக்கை வைத்துள்ளன. அதை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அதேநேரத்தில், பண்டிகை, பள்ளி தேர்வுகள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, தேர்தல் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதே என்ற கேள்விக்கு, ''கடந்த 10 ஆண்டுகளில், பீஹார் சட்டசபை தேர்தல்தான் சிறப்பாக நடந்தது. அதை விடவும் தமிழக தேர்தல் வித்தியாசமானதாக இருக்கும். அதை நீங்கள் பார்ப்பீர்கள்,'' என, ஞானேஷ்குமார் பதிலளித்தார்.
முன்னதாக, தமிழக உயர் அதிகாரிகளிடன், தேர்தல் தொடர்பாக ஞானேஷ்குமார் ஆலோசித்தார். தொடர்ந்து, தமிழகம் முழுதுமிருந்து சிறப்பாக செயல்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களை கவுரவித்து, அவர்களுடன் தேர்தல் அதிகாரிகள், குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மதுரை சித்திரை திருவிழா உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டால், ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடக்கவும், அதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகவும் வாய்ப்பு அதிகம் என, தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தமிழக வாக்காளர்கள் விபரம்: ஆண்கள் 2.77 கோடி பெண்கள் 2.89 கோடி மூன்றாம் பாலினத்தவர் 7,617 மொத்தம் 5.67 கோடி பிரிவு வாரியாக வாக்காளர்கள் விபரம்: 20 முதல் 29 வயதினர் 1.05 கோடி 18 முதல் -19 வயதினர் 12.51 லட்சம் மாற்றுத்திறனாளிகள் 4.63 லட்சம் 85 வயதுக்கு மேற்பட்டோர் 3.99 லட்சம் நுாறு வயதுக்கு மேற்பட்டோர் 2,530 ஓட்டுச்சாவடி விபரம்: கிராமங்கள் 44,065 நகரங்கள் 30,967 மொத்தம் 75032 ***

Advertisement

பிப் 28, 2026 09:08 pm

வித்தியாசமாக இருக்கும்
ஓட்டோ இல்லாத கட்சிகள் வெற்றி பெறும்

Reply Rate this
பிப் 28, 2026 06:56 pm

பொய் செய்தி தடுக்கப்பட வேண்டும்.
அதே சமயம் 1951 அரசியல் சாசனம் படி வேட்பாளர் வைப்புத் தொகை 10,000/- ,25,000/- என்பதும் 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும் என்பதும் உண்மையானதா ? இல்லை 250/- ரூபாய், 500/- ரூபாய் மற்றும் 2 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும் என்பது உண்மையானதா? இந்த இரண்டில் எது பொய் ? தலைமை தேர்தல் ஆணையர்கள் மூவரும் விளக்கம் தர வேண்டும்.

Reply Rate this
பிப் 28, 2026 03:45 pm

பரிசு பொருட்கள் பண பட்டுவாடா போன்றவற்றை மட்டும் தேர்தல் கமிஷன் தடுத்து நிறுத்தி விட்டால்.... உலகின் 7 அதிசயங்களை மிஞ்சி முதல் அதிசயமாகி விடும். அரசியல் கட்சிகள் இது போன்ற எலும்பு துண்டுகளை போட தான் செய்யும். வாக்கின் மகத்துவம் அறியாத சில ...கள் வாலாட்டி கவ்வ தான் செய்யும். காசு துட்டு மணி மணி

Reply Rate this
பிப் 28, 2026 10:34 am

எப்படியும் தேர்தலை ஏப்ரல் கடைசி அல்லது மே மாதம் முதலில் தான் நடத்துவார்கள் போல தெரிகிறது. மகளிர் உதவி தொகை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கு அந்த பெப்ரவரி மாதத்தில் கொடுத்த 5000 இல் அடங்கும் என்பது மக்களுக்கு புரிய வரும்.

Reply Rate this
பிப் 28, 2026 10:03 am

அதெல்லாம் எந்த வித்தியாசமும் மிரட்டலும் திமுககாரனுகிட்ட பலிக்காது. என்ன ஒரு ஆறுதலான விஷயம்னா திமுகவின் அடிமையாக இருந்த தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதாசாகு என்பரை அந்தப் பதவியில் இருந்து வேற
பதவிக்கு தூக்கி அடிச்சீட்டீங்க அது ஒண்ணுதான் ஆறுதல்!

Reply Rate this
பிப் 28, 2026 07:34 am

இவர் அறிக்கை பயத்தைதான் உண்டு பண்ணுகிறது

Reply Rate this
பிப் 28, 2026 05:19 am

தேர்தல் ஒரு திருவிழா !
தேதி அறிவிக்கும் முன்பே பணம் பதாளம் பாய்ந்து இருக்கும், ஆனால் Magic என்ன வென்றால், தேதி அறிவித்த உடன் தான் பண பட்டுவாடா நடக்கும் என்று பொது மக்களை நீங்க பன்ன இருக்கு டார்ச்சர் தான், திருவிழாவின் குறை!

Reply Rate this