Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 புதுச்சேரி 'இண்டி' கூட்டணியில் உரசல் காங்., - தி.மு.க., தொகுதி பங்கீட்டில் இழுபறி

 புதுச்சேரி 'இண்டி' கூட்டணியில் உரசல் காங்., - தி.மு.க., தொகுதி பங்கீட்டில் இழுபறி

புதுச்சேரி: புதுச்சேரியில், 'இண்டி' கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார் என்பதில் காங்., - தி.மு.க., இடையே கடும் மோதல் நிலவி வருவதால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த 2004 லோக்சபா தேர்தலில் துவங்கிய காங்., - தி.மு.க., கூட்டணி, கடந்த 2011 சட்டசபை தேர்தல் வரை நீடித்தது.

கடந்த 2014 லோக்சபா தேர்தலில் தனித்தனியாக களம் கண்ட இரு கட்சிகளும், 2016 சட்டசபை தேர்தலில் மீண்டும் இணைந்தன. இந்த கூட்டணி, வரும் சட்டசபை தேர்தலிலும் நீடிப்பது தமிழகத்தில் உறுதியாகி விட்டது.

இந்த கூட்டணிக்கு, கடந்த தேர்தல் வரை தமிழகத்தில் தி.மு.க.,வும், புதுச்சேரியில் காங்., கட்சியும் தலைமை தாங்கின. அதன்படி, புதுச்சேரியில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க., 13 தொகுதிகளிலும், கம்யூ., மற்றும் வி.சி., கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிட்டன. அதில், காங்., கட்சி இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

தி.மு.க., ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி பதவியையும் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, இரு கட்சிகளிடையே கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் உரசல் ஏற்பட்டதால், கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் புதுச்சேரி வந்த காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், கூடுதல் பொறுப்பாளர் அஞ்சலி நிமில்கர் ஆகியோர், தொகுதி பங்கீடு குறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்டனர்.

அப்போது நிர்வாகிகள், 'புதுச்சேரியில் கூட்டணிக்கு காங்., தான் தலைமை தாங்க வேண்டும். கடந்த 2011, 2016 சட்டசபை தேர்தல்களில் பின்பற்றிய தொகுதி பங்கீட்டு பார்முலாப்படி, வரும் தேர்தலில் காங்., குறைந்தது 21 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். மீதமுள்ள ஒன்பது தொகுதிகளை, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க வேண்டும்' என்றனர்.

அதே நேரத்தில், தி.மு.க.,வினர், தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன், மாநில அமைப்பாளர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது நிர்வாகிகள், 'காங்., கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

'பழைய பார்முலாவை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதியில் போட்டியிட வேண்டும்' என கூறி முடிவு செய்தனர்.

இதற்கிடையில், காங்., கட்சியினர் கிரீஷ் ஷோடங்கர் தலைமையில் தொகுதி பங்கீடு பேச்சு நடத்த முடிவு செய்து, தி.மு.க.,வினருக்கு அழைப்பு விடுத்தனர். அதை மறுத்த தி.மு.க.,வினர், புதுச்சேரியில் உள்ள அலுவலகம் அல்லது சென்னை அறிவாலயத்தில் பேச்சு நடத்தலாம் எனக் கூறியுள்ளனர். இது, காங்., கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement